`சிவனைப் தரிசிக்க வேண்டும்" – ஆண்டு கணக்கில் நின்றுகொண்டே இருக்கும் சாமியார் | Viral Video

Spread the love

இந்தியாவைச் சேர்ந்த துலால் கிரி ஜி மகாராஜ் என்ற இந்து சாமியார் ஒருவர், தனது ஆன்மீக நேர்த்திக்கடனுக்காகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நின்றுகொண்டே இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. சிவபெருமானின் தீவிர பக்தரான இவர், இளமையிலேயே பல்கலைக்கழகக் கல்வியைத் துறந்து ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.

அவர் எத்தனை ஆண்டுகளாக இவ்வாறு நின்றுகொண்டிருக்கிறார் என்பதில் மாறுபட்ட தகவல்கள் உள்ளன. அவர் சிவனை தரிப்பதற்காக 5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை தொடர்ந்து நின்றுகொண்டிருப்பதாக இணையப் பக்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் உட்காருவதோ, கால்களை நீட்டுவதோ, தரையில் படுத்து உறங்குவதோ இல்லை என்றும், சங்கிலிகளால் கூரையில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு மரக்கட்டை மற்றும் பிரத்யேகப் பட்டைகளின் உதவியோடு நின்றுகொண்டே தூங்குவதாகவும் கூறப்படுகிறது. இது இந்து ஆன்மீக மரபில் “கடா தபஸ்யா” (நின்றுகொண்டே செய்யும் தவம்) என்று அழைக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில், சாமியாரின் கால்கள் கடுமையாக வீங்கி, கணுக்கால் முதல் தொடை வரை கருகிய நிறத்தில் காட்சியளிக்கின்றன. அவரது கால்களில் ஏற்பட்டுள்ள காயங்களுக்குக் கோவில் தொண்டர்கள் மருந்து தடவும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தோற்றத்தைக் கண்ட மருத்துவ ஆர்வலர்கள், தொடர்ந்து நின்றுகொண்டிருப்பதால் நிணநீர் தேக்கம் (Lymphedema) அல்லது ரத்த ஓட்ட பாதிப்பால் திசுக்கள் அழுகும் Gangrene போன்ற தீவிர பாதிப்புகள் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் இணையவாசிகள் மத்தியில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் அவரது அசாத்திய மன உறுதி மற்றும் பக்தி வைராக்கியத்தைப் பாராட்டி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கடவுளை வழிபட உடலை வருத்த வேண்டிய அவசியமில்லை, அமைதியாக அமர்ந்து தியானம் செய்தாலே போதும். இவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீவிர தவ முறை, கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் உலக அமைதிக்காகத் தனது ஒரு கையைத் தொடர்ந்து உயர்த்தியபடியே வாழும் அமர் பாரதி என்ற மற்றொரு இந்தியச் சாமியாரின் செயலோடு ஒப்பிடப்படுகிறது. காலப்போக்கில் அமர் பாரதியின் கை தசைகள் செயலிழந்து போனது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *