`ஊழலற்ற நேர்மையான ஆட்சி’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து ஆட்சியைப் பிடித்தது த.வெ.க. ஆனால் ஆட்சிக்கு வந்த ஒருசில தினங்களிலேயே அக்கட்சி நிர்வாகிகள் வசூல் வேட்டையில் இறங்கியதாகப் புகார்கள் எழுந்தன.
அதையடுத்து கடந்த 24.05.2026 தேதியிட்ட ஜூ.வி இதழில், `ஆவின் தலைவர் பதவி ரூ.50 லட்சம்… அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சம்… வசூல் சர்ச்சையில் த.வெ.க மாவட்டச் செயலாளர்’ என்ற தலைப்பில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.
அந்தக் கட்டுரையில் நாம் குறிப்பிட்டிருந்த விழுப்புரம் மாவட்டச் செயலாளர் `குஷி’ மோகன் மீதுதான் தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார் வழக்கறிஞர் ஞானசௌந்தரி.

அதன் தொடர்ச்சியாக கட்சி நிர்வாகி ஒருவருடன் அவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, தகித்துக் கொண்டிருக்கிறது த.வெ.க. அந்த ஆடியோவில், `நான் எவ்வளவு கஷ்டப்படற குடும்பம் தெரியுமா? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் நான்.
தளபதி வெற்றிபெற்றதும், அவர் எனக்காகவே வெற்றிபெற்றதாக நினைத்தேன். ஏனென்றால் நாம் அரசு தரப்பு வழக்கறிஞராவோம். வாழ்க்கையில் முன்னேறுவோம் என்று நினைத்தேன்.
ஆனால் அவர் (குஷி மோகன்) என்னை மிகவும் கேவலமாக நடத்தினார். அ.தி.மு.க, தி.மு.க-வில் அந்தக் கட்சிக்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நம் கட்சியில்தான் மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு கொடுக்கிறார்கள்’ என்று நீள்கிறது அந்த ஆடியோ.