இந்நிலையில், நேற்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லெட்சுமிநாராயணன் அடங்கிய குழு சந்தோஷ் சர்மா மீது தாக்கல் செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அருண் ஐ.பி.எஸ் மீது கடும் கண்டனங்களையும் நீதிபதிகள் தெரிவித்தனர். ‘குண்டர் சட்டத்தை பயன்படுத்தி தடுப்புக் காவலில் வைக்கும் அளவுக்கு இந்த வழக்கு ஆபத்தானது இல்லை என்பது அருணுக்கு நன்றாகவே தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு வழக்கை பதிந்திருக்கிறார். அருண் ஒன்றும் புதிய அதிகாரி அல்ல. நேரடி ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சிப் பெற்று 28 ஆண்டுகள் அனுபவமுள்ள ஒரு அதிகாரி இப்படி செய்வது சட்டத்தை அறிந்திருந்தும் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த செயலாகவே தெரிகிறது.

அருண் இப்படி குண்டர் சட்டத்தை பிரயோகிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சவுக்கு சங்கர், வராகி போன்றோர் மீதும் இதே விதத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு சமயத்திலும் நீதிமன்றம் அந்த வழக்குகளை ரத்து செய்திருக்கிறது. அருண் ஐ.பி.எஸ் கொடுக்கும் விளக்கங்கள் ஏற்புடையதாக இல்லை. காத்திருப்புப் பட்டியலில் இருந்த அருண் இப்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர். சி.வி.நரசிம்மன், சி.எல்.ராமகிருஷ்ணன் போன்ற உயர்ந்த நேர்மையும் நற்பெயரும் கொண்ட அதிகாரிகள் பணியாற்றிய இது. அவர்கள் மீது பணிக்காலம் முழுவதும் எந்தக் குற்றச்சாட்டும் இருந்தது இல்லை. ஊழல் சமூகத்துக்கு எதிரான பெரும் தீமை. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதைப் போல லஞ்ச ஒழிப்புத்துறையிம் இயக்குனர் பதவியிலும் நற்பெயரும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளே இருக்க வேண்டும்’ என்றனர்.
சந்தோஷ் சர்மா மீது வேறு எந்த வழக்குகளும் இல்லாதபட்சத்தில் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.