International
oi-Vigneshkumar
பெய்ஜிங்: ஒரு காலத்தில் பல சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சீனாவிலேயே தயாரித்து வந்தன. ஆனால், பல்வேறு காரணங்களால் உலக நாடுகள் இப்போது சீனாவில் இருந்து வெளியேறி வருகின்றன. ஏற்கனவே சாம்சங், ஆப்பிள் நிறுவனங்கள் சீனாவுக்கு வெளியே தனது உற்பத்தியை அதிகரிக்க முயன்று வரும் நிலையில், அந்த லிஸ்டில் இப்போது கூகுளும் இணைந்துள்ளது. இதுகுறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
ஒட்டுமொத்த உலகிற்கும் உற்பத்தி மையமாக இருந்தது சீனா தான். பல ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நிறுவனங்களும் சீனாவிலேயே தங்கள் உற்பத்தி ஆலைகளை வைத்திருந்தன. ஆனால், கொரோனா சமயத்தில் சீனாவின் கட்டுப்பாடுகளால் சர்வதேச நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டன. இதனால் சர்வதேச நிறுவனங்கள் சீனாவை மட்டும் நம்பி இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தன.

கூகுள்
கூடவே டிரம்பும் சீனாவுக்கு எதிராக வரிகளை விதிக்கவே நிலைமை சட்டென மாறியது. பல்வேறு நிறுவனங்களும் சீனாவுக்கு வெளியே தங்கள் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த லிஸ்டில் இப்போது கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியை சீனாவுக்கு வெளியே மொத்தமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக இந்தியா மற்றும் வியட்நாமில் உற்பத்தியை தொடர்ந்து கூகுள் நிறுவனம் அதிகரித்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் பிக்சல் போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளிட்ட அனைத்து தயாரிப்புகளின் உற்பத்தியையும் சீனாவில் இருந்து மாற்றுமாறு தனது சப்ளையர்களிடம் கூகுள் கேட்டுக் கொண்டுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் தனது ஒட்டுமொத்த தயாரிப்பையும் சீனாவுக்கு வெளியே மாற்ற கூகுள் இலக்கு வைத்துள்ளது.
சீனாவை விட்டு வெளியேறுவது ஏன்?
அமெரிக்கா மற்றும் சீனா இடையே தொடர்ந்து நிலவி வரும் வர்த்தக மற்றும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், தனது சப்ளை செயினை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தக் கூகுள் முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் வியட்நாமில் கூகுள் தனது உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இருப்பினும், பிக்சல் போன்களின் உற்பத்தி தற்போது வரை சீனாவிலேயே அதிகம் நடைபெற்று வருகிறது.
கூகுளின் பிச்கல் போன்கள் சீனாவில் விற்கப்படுவதில்லை. அப்படியிருக்கும்போது இவ்வளவு பதற்றத்திற்கு நடுவே ஏன் சீனாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என கூகுள் யோசிக்கிறது. இதன் காரணமாகவே சீனாவில் இருந்து மொத்தமாக உற்பத்தியை நிறுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. வியட்நாமில் பிக்சல் மொபைல் உற்பத்தியை அதிகரிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. வியட்நாமில் வெற்றிகரமாக பிக்சலை போனை தயாரிக்க முடியும் நிலையில், சீனாவில் இருந்து சீக்கிரம் வெளியேறிவிட முடியும் என கூகுள் நம்புகிறது. இதே வேகத்தில் எல்லாம் நடந்தால் எதிர்காலத்தில் பிக்சல் போன்களின் முக்கிய உற்பத்தி மையமாக வியட்நாம் மாறும்!
சாம்சங்
ஏற்கனவே சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகளவில் சீனாவுக்கு வெளியே மாற்றி அமைத்துள்ள நிலையில், அந்த லிஸ்டில் கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. சாம்சங், கூகுள் மட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனமும் கூட தனது ஐபோன் உற்பத்தியை சீனாவுக்கு வெளியே பரவலாக்கி வருகிறது. அதில் இந்தியாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து, உற்பத்தியையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
வியடம்நாம் மட்டுமின்றி இந்தியாவுக்கும் இந்த திட்டத்தில் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுள் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது கூகுள் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அதை கருத்தில் கொண்டு இந்தியாவிலும் தனது பிக்சல் ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி செலவு, சப்ளை செயின் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என கூகுள் நினைக்கிறது.
முக்கிய நிறுவனங்கள் இதுபோல சீனாவில் இருந்து வெளியேறுவது இந்தியாவுக்கே நன்மை பயர்ப்பதாக இருக்கிறது. இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கும் நிலையில், இதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கிறது.


