சுகேஷின் ரூ.200 கோடி மோசடி வழக்கு; அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விருப்பம்

Spread the love

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் சிங் சிறையில் இருந்தபோது அவரை வெளியில் கொண்டு வருவதாக தொழிலதிபர் மனைவியிடம் கூறி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி ஆர்தர் ரோடு சிறையில் இருந்தபோது அங்கிருந்து கொண்டே பாலிவுட் பிரபலங்கள் மற்றும் மாடல் அழகிகளை சிறைக்கு வரவழைத்து பரிசுப்பொருட்களையும், பணத்தையும் வாரி இறைத்தார். இதற்கு சிறை அதிகாரிகள் துணையாக இருந்தனர். அதோடு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சிறையில் இருந்துகொண்டு ஆன்லைன் மூலம் ஏராளமான பொருட்களை ஆர்டர் செய்து கொடுத்துள்ளார்.

இதனால் சுகேஷ் சந்திரசேகர் பரோல் மூலம் வெளியில் வந்தபோது சென்னைக்கு தனி விமானத்தில் சென்று அவரை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சந்தித்து பேசிவிட்டு வந்தார். அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது.

இவ்வழக்கை டெல்லி போலீஸாரும், அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ விசாரித்து வருகிறது. சுகேஷிடமிருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள பரிசுப்பொருள் மற்றும் பணத்தை வாங்கியது தொடர்பாக ஜாக்குலின் பெர்னாண்டஸையும் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக ஜாக்குலினிடம் அமலாக்கப்பிரிவு பல முறை விசாரணையும் நடத்தி இருக்கிறது. தன்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று கோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார். இம்மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டும் ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு சாதகமாக தீர்ப்பு கொடுக்கவில்லை.

இதையடுத்து இவ்வழக்கு விசாரணை நடந்து வரும் நீதிமன்றத்தில் ஒரு மனு ஜாக்குலின் பெர்னாண்டஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இவ்வழக்கில் அப்ரூவராக மாறி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ஜாக்குலின் தெரிவித்துள்ளார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரசாந்த், இதற்காக முறைப்படி மனு தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இவ்விவகாரத்தில் அமலாக்கப்பிரிவுக்கும் பதில் கொடுக்கும்படி கூறி நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். தமிழகத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரனிடம் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிடமிருந்து வாங்கித்தருவதாக பணத்தை மோசடி செய்தவர் சுகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *