மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதரமாக இருப்பது வைகை அணை.
அதோடு வைகை அணையிலிருந்து வரும் நீரை வைத்தே இந்த மாவட்டங்களிலெல்லாம் விவசாயம் நடைப்பெற்று வருகிறது. சுமார் 68 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையின் நீர் மட்டம் 20 அடிக்கும் கீழ் சென்றது, இதனால் மதுரை, தேனி மாவட்டங்களில் தண்ணீருக்காக எடுக்கும் நீரின் அளவு குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இது குறித்து 14/06/2026 தேதியிட்ட ‘ஜுனியர் விகடன்’ இதழில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில் வைகை அணையில் 20 அடிக்கு வண்டல் மண் மற்றும் மணல் இருக்கிறது.
இதனால் அணையின் அடி மட்டம் சேரும், சகதியாக இருக்கிறது. இந்தக் காரணங்களால் நீர் கலங்கலாக இருப்பதோடு நீரைத் தேக்கி வைப்பதிலும் சிக்கல் இருக்கிறது; வைகை அணையைத் தூர்வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் பேட்டிகளுடன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
ஜூ.வி. இதழ் வெளியான நான்காவது நாளான நேற்று வைகை அணைய தூர்வாருவது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதனுடன் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர், நிர்மல்குமார்.
ஆய்வு செய்து விட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், ”வைகை அணையில் தூர்வாரும் பணிகள் குறித்து தற்போது வரை ஆய்வு நடத்திக் கொண்டு வருகிறோம்.
இதற்காக மத்திய அரசிடம் ஒப்புதலைக் கேட்டு சில நாள்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது ஒப்புதல் கிடைத்தவுடன் தூர்வாரும் பணிகள் துவங்கப்படும்.
மூன்று கட்டங்களாகத் தூர்வாரும் பணிகள் மேற்கொண்டால் கூட முடிவு பெற 9 வருடம் ஆகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு முன்பாகப் பணிகளை முடிப்பதற்குத் திட்டமிடக் கூறியிருக்கிறோம். வைகை அணையில் மணல் மேடுகளால் 20% நீர் தேக்க முடியாத சூழல் தற்போது உள்ளது. அதை நிவர்த்தி செய்யும் பணிகளில் மேற்கொள்ள உள்ளோம்.