ஜூன் 8 – அன்று ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர்.
‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே, சிபிஐ(எம்)-ன் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், கேரள சட்டமன்றத் தேர்தலின்போது அப்போதைய முதல்வரும் சிபிஐ(எம்)-ன் முக்கியத் தலைவருமான பினராயி விஜயன் மீது ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த காங்கிரஸ் தேசியத் தலைவர்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்துத் தனது கட்சியின் கடும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் சிபிஐ(எம்) தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜான் பிரிட்டாஸும் இந்த விவகாரத்தைப் பேசி கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், ‘இந்தியா கூட்டணி’க் கூட்டத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு மற்றும் உரை வடிவம் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதில், “காங்கிரஸ் கட்சி குறித்து இன்று கூறப்பட்ட கருத்துகளுக்குப் பதிலளிப்பது எனது பணி அல்ல. சைவ மரபில் உள்ளது போல, அனைத்தையும் உள்வாங்கிக்கொள்வதே எனது பணி. அனைத்து நஞ்சையும் அருந்திய நீலகண்டனின் தத்துவம் அது.
நீங்கள் இன்னும் என்ன சொல்ல விரும்பினாலும், என் மீதோ அல்லது காங்கிரஸ் கட்சி மீதோ உங்களுக்கு என்ன விமர்சனங்கள் இருந்தாலும், நாங்கள் அதை மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் ஏற்றுக்கொள்வோம்.
உங்களை மகிழ்ச்சிப்படுத்த நாங்கள் முயற்சிப்போம், ஏனெனில் எங்கள் பங்கு அடிப்படையில் உங்களுடையதிலிருந்து மாறுபட்டது. இதை நான் ஆணவத்துடன் சொல்லவில்லை.
உங்களில் பலர் கூறியது போல, அன்பு மற்றும் பாசத்துடன் உங்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதே எங்கள் பங்கு. நமக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை அல்லது நாம் இணைந்து செயல்படுவதில்லை என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். இவை அனைத்தும் பா.ஜ.க பரப்பும் கருத்துகள். இது உண்மையில்லை.

தி.மு.க விவகாரத்தைப் பொறுத்தவரை நான் 100% உறுதியாக இருக்கிறேன். இப்போதே அதற்காக உத்தரவாதம் அளிக்க முடியும். ‘இந்தியாவின் கருத்தாக்கத்தைப்’ (idea of India) பாதுகாக்கும் விஷயத்தில், இந்த அறையில் உள்ள ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து நிற்பார்கள்.
நமக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கேரளாவின் முன்னாள் முதல்வரைச் சென்று கட்டிப்பிடிக்குமாறு என்னிடம் கேட்டால், என்னால் அதைச் செய்ய முடியாது, செய்யவும் மாட்டேன்.
ஏனெனில், அவருடன் எனக்குத் தொடர்ச்சியான அரசியல் மோதல் உள்ளது. எனவே, நாம் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் பலவீனமானவை என்று நிரூபிக்க முயலும் வகையில் நம் மீது முழு வீச்சிலான தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்” எனக் கூறப்பட்டிருக்கிறது.
ராகுல் காந்தியின் இந்த உரைக்குப் பதிலளிக்கும் வகையில், கேரளத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், “மக்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொள்வது அரிதான ஒன்று. நானும் ராகுல் காந்தியும் சந்திக்கும்போது, பொதுவாக ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்போம் அல்லது கைகுலுக்குவோம். ஆனால், ராகுல் காந்தி நரேந்திர மோடியைக் கட்டிப்பிடிக்கும் புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.

அவர் மோடியைக் கட்டிப்பிடித்ததில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், (இந்தியாக் கூட்டணியின் கூட்டத்தில்) அவர் பேசிய விதம் அதை வேறு விதமாகச் சித்தரித்தது. இது ராகுல் காந்தியின் பேச்சுப் பாணியையும், இந்தியாக் கூட்டணியை அவர் எப்படிப் பார்க்கிறார் என்பதையும் பிரதிபலிக்கிறது.
இன்று இந்தியாக் கூட்டணி இருக்கும் சூழலால், நாங்கள் மட்டுமல்லாமல் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் அல்லாத பிற முக்கிய கட்சிகளும் கூட்டத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டிற்கு எதிராகப் பேசின.
தி.மு.க-வின் தற்போதைய நிலைப்பாடு என்னவென்று எங்களுக்குத் தெரியும். இவை அனைத்தும் காங்கிரஸின் அணுகுமுறையாலும், குறிப்பாக ராகுல் காந்தியின் அணுகுமுறையாலும் ஏற்பட்டவை.
உண்மை என்னவென்றால், இந்த அணுகுமுறை இந்தியாக் கூட்டணியை வலுப்படுத்தவில்லை. இது பெரும்பாலும் பா.ஜ.க-வுக்கே உதவுகிறது. இத்தகைய செயல்கள் மூலம், ராகுல் காந்தி பெரும்பாலும் பா.ஜ.க-வுக்குத் துணைபோகும் ஒருவராகவே மாறிவிடுகிறார்” என்றார்.

சிபிஐ(எம்) தலைவர் பேபி, “பினராயி விஜயனைக் கட்டிப்பிடிக்குமாறு ராகுல் காந்தியிடம் யாரும் கேட்கவில்லை. மாறாக, பினராயி விஜயன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்யக் கோருவதன் மூலம் அமலாக்கத் துறை மற்றும் மோடி அரசுக்குத் துணைபோவதை அவர் நிறுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.