கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கர்நாடக வனத்துறையினர் ரோந்து பணியின்போது, மறைந்திருந்த 4 தமிழர்கள் மீது நாட்டு துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், மரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த அந்தோனிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஹனூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிபிஎம் சண்முகம் தன் எக்ஸ் பக்கத்தில், “கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள், காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.