International
oi-Nantha Kumar R
காத்மாண்ட்: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 400க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மொத்த உலகத்தையும் உலுக்கி உள்ள நிலையில் நேபாளம் – திபெத் எல்லையில் உள்ள உயரமான கட்டடத்தையே வெள்ளம் மூழ்கடித்த வீடியோ வெளியாகி உள்ளது.

நேபாளத்திற்கு இன்று கருப்பு நாள்.. ஆம் இயற்கை எழில் சூழ்ந்த நேபாளம் இயற்கை பேரிடரால் பெரும் துயரத்தில் சிக்கி உள்ளது. நேபாளத்தில் ஏற்கனவே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் இன்று திடீரென்று ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்தது.
நேபாளத்தில் போட்டிகோஷி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் தான் இன்று பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் நேபாளத்தில் உள்ள நுவாகோட், தாடிங்க், ரசுவா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், கட்டடங்கள், வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. பாலங்கள், ரோடுகள், நீர் மின்நிலையங்கள் பெரிய அளவில் சேதத்தை எதிர்கொண்டன. இன்று இரவு 10 மணி நிலவரப்படி மொத்தம் 93 பேர் பலியாகி உள்ளனர். இந்தியர்கள் 133 பேர் உள்பட மொத்தம் 400 பேர் வரை மாயமாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கைலாய யாத்திரைக்கு சென்று வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தான் நேபாளம் வெள்ளம் தொடர்பான அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. ஒவ்வொரு வீடியோவிலும் சுனாமி அலை போல் பலஅடி உயரத்துக்கு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுப்பது இடம்பெற்றுள்ளது. அதில் ஒன்று அனைவரையும் நடுங்க வைககும் வகையில் உள்ளது. அதாவது நேபாளம் – திபெத் எல்லையில் பொதுமக்கள் இயல்பாக நடமாடி வருகின்றனர். அப்போது பேரிரைச்சல் கேட்கிறது. இதனால் பொதுமக்கள் என்னவென்று தெரியாமல் பயந்து ஓடுகின்றனர்.
Wtf #Nepal
pic.twitter.com/dfBqdDMiox— bharath kumar gudlanarva (@BGudlanarva) August 26, 2026
அடுத்த சில வினாடியில் மண்ணும், தண்ணீரும் சுனாமி அலை போல் எழுந்து சீறிப்பாய்ந்து அங்கு கம்பீரமாக எழுந்து நிற்கும் கட்டடத்தை தாக்குகிறது. அந்த கட்டடத்தின் முன்பு இருந்த பொதுமக்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஒரு நொடியில் வெள்ளம் அடித்து சென்றது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.