International
oi-Mani Singh S
காத்மாண்ட்: நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், இதுவரை 157 பேர் பலியாகி உள்ள நிலையில் 700-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. மீட்பு பணி ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நள்ளிரவில் மீண்டும் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அங்குள்ள மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
நேபாளத்தின் போட்டி கோஷி ஆற்றில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் அந்த நாடு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஆற்றில் கட்டிடங்கள், பாலங்கள், வீடுகள் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தின. வெள்ளத்தால் தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் 700-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. தமிழர்கள் 57 பேர் உள்பட இந்தியர்கள் 150 பேர் மாயமானதாகவும் சொல்லப்படுகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் அவர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது. பெருவெள்ளத்தால் வீடுகள், குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான இடங்கள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன.
சிலர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்பதால் மீட்பு பணி ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படி, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நேபாளத்தில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரசுவா பிராந்திய பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
நேபாளத்தை உருக்குலைத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட நில அதிர்வே காரணம் என்று கூறப்படும் நிலையில், மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை பீதி அடைய வைத்துள்ளது. நேபாளத்தின் வடமேற்கில் உள்ள கோதாரி பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
