
தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்லம் பாக்”. இந்தப் படத்தின் டீசர் வரும் ஜூன் 8 அன்று வெளியாகிறது. இப்படத்திற்கு 33 டெம்பிள் ரோடு என துணைத் தலைப்பும் வைத்துள்ளனர். நாயகியாக சம்யுக்தா நடித்துள்ள இப்படத்தில் நடிகை தபு, கன்னட நட்சத்திரம் துனியா விஜய், பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் நடிக்கும் டி5 படத்தில், நடிகை சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளாராம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில், சாய் பல்லவி காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்காக அவர் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், இது அவரது திரைப்பயணத்தில் அதிரடியான கதாபாத்திரமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
“கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. ஆனால், அதைவிட பிறருக்கு உதவி செய்து அதை வீடியோவாக வெளியிட்டதன் மூலம் இன்னும் பிரபலமாக மாறினார். இந்த நிலையில் அரசியல் குறித்து தனது நிலைப்பாட்டை பாலா தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ‘எனக்கு அரசியல் குறித்து ஆழமான அறிவு இல்லை. அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வமும், அவசியமும் எனக்குத் தோன்றவில்லை. என்னால் முடிந்தளவு சமூகத்திற்கு பயனுள்ள விஷயங்களைச் செய்வதே எனது நோக்கம்’ என்கிறார் பாலா!
சூப்பர் ஸ்டாரின் மனைவி லதா ரஜினிகாந்த், ‘மக்கள் மேடை என்ற இயக்கத்தை தொடங்கியிருப்பது தெரிந்ததே. ‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகநீதிக்கும், கல்விக்கும், அரசியல் விழிப்புணர்வுக்கும் மக்கள் ஒரே மேடையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய யோசனைகள், அனுபவங்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் உண்மையான மாற்றம் சாத்தியம்’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். மாற்றத்தை சொல்லி விஜய் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ‘உண்மையான மாற்றம் என்று அவர் எதை சொல்கிறார் என்பதுதான் பலரது கேள்வி!
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படத்தின் இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் இடையே பிரச்னை ஒன்று உச்சத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் இயக்குநர் முதல்வரை சந்தித்துவிட்டு சமூகவலைதளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். இதையடுத்து இயக்குநரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். பதிலுக்கு அந்த நடிகரின் இன்ஸ்டா பதிவில், அன்புடன் முன்னேறுங்கள், பணிவாகவும், பெருந்தன்மையுடன் இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவு இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் இடையேயான மனக்கசப்பை உறுதி செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!