“சன்ஸ்பாட் 4455 மீண்டும் தாக்கியுள்ளது! அதன் சிக்கலான தன்மை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, எனவே அடுத்த 72 மணி நேரத்திற்கு X-வகை புயல்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகவே இருக்கும்” என விண்வெளி இயற்பியலாளர் தமிதா ஸ்கோவ் (Tamitha Skov) தனது X தளத்தில் எச்சரித்திருந்தார். அவர் சொன்னது போலவே, அடுத்த 10 மணி நேரத்திற்குள் ஒரு X-வகை புயல் உருவாகிவிட்டது!

அரோரா வெளிச்சத்தைக் காணத் தயாரா?
இந்த சூரிய வெடிப்புகளால், சூரியனில் இருந்து கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) எனப்படும் மிகப்பெரிய பிளாஸ்மா மேகங்கள் விண்வெளியில் வீசப்பட்டுள்ளன. இதில் மூன்று CME-க்கள் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கலாம் என அரோரா ஆர்வலர் வின்சென்ட் லெட்வினா தெரிவித்துள்ளார். பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம், M9.3 புயலால் உருவான ஒரு CME ஜூன் 4-ம் தேதி பூமியை வந்தடையும் என உறுதி செய்துள்ளது. மற்ற இரண்டு CME-க்களின் பாதையும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த CME-க்கள் பூமியின் காந்தப்புலத்தைத் தாக்கும்போது, ஜியோமேக்னடிக் புயல் (Geomagnetic Storm) உருவாகும். இதன் காரணமாக, ஜூன் 4 முதல் 6 வரை G3 (வலிமையான) புவி காந்தப் புயலுக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. சில சமயம் இது G4 (மிகக் கடுமையான) புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. இதுதான் அந்த நல்ல செய்தி! புவி காந்தப் புயல்கள் ஏற்படும்போது, பூமியின் துருவப் பகுதிகளில் தோன்றும் ‘அரோரா’ எனப்படும் வண்ணமயமான வான வேடிக்கை நிகழ்வு, வழக்கத்தை விடத் தெற்குப் பகுதிகளிலும் தெளிவாகத் தெரியும். இதனால், பொதுவாக அரோரா தெரியாத பல பகுதிகளில் வசிப்பவர்களும் இந்த அற்புதமான காட்சியைக் காண வாய்ப்புள்ளது.
விஞ்ஞானிகள் தற்போது பூமியை நோக்கி வரும் CME-க்களின் வேகம் மற்றும் தாக்கத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதே சமயம், ‘4455’ சன்ஸ்பாட் பகுதி இன்னும் உயிர்ப்புடன் இருப்பதால், அடுத்த சில நாட்களில் மேலும் சில சூரியப் புயல்களை நாம் எதிர்பார்க்கலாம்.