
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டி தவெக எம்எல்ஏக்களிடம் சிலர் குதிரை பேரம் நடத்துவதாக அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் இளையராஜா தன்னிடம் ரூ 35 கோடி தருவதாக பேரம் பேசினார்கள் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். புகார் மனு மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில், த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் கூறிய அறிவுரையின் பேரில்தான் த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியையும், அவரது சகோதரர் அசோக்குமாரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அந்த சம்மனில், ஜூலை 6-ந்தேதி (அதாவது நேற்று) ஆஜராகவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன்படி நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பி செல்லாமல் தடுப்பதற்காக, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லூக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்து, போலீசார் உஷார்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குதிரை பேரத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுதாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் நேரில் ஆஜராகி வாதிட உள்ளார்.
மேலும் இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவரும் நேரில் ஆஜார் ஆகுவார்களா? தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சியில் ஈடுப்பட்டார்களா? விசாரணையில் இருவரும் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என்ற பல கேள்விகளும் இதற்கெல்லாம் செந்தில் பாலாஜி என்ன பதிலளிப்பார் என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.