செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டும் காவல்துறை? – இதுவரை நடந்தது என்ன?

Spread the love

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவை அணுகிய சிலர், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசியுள்ளனர். இதற்கு உடன்படாத எம்.எல்.ஏ, கட்சித் தலைமையின் ஒப்புதலுடன் ஜூன் 29-ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். திருவல்லிக்கேணி காவல்துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

செந்தில் பாலாஜி

விசாரணையின் அடிப்படையில், ‘ஐபிடிஎஸ்’ நிறுவனத்தை நடத்தும் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய 3 பேர் முதற்கட்டமாகக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் சீனிவாசன், செல்வன், குரோம்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் கரூரில் பிடிபட்ட கார்த்திக், ரமேஷ் என மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

விசாரணையில், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், சென்னையில் நரேஷைச் சந்தித்துள்ளதும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் அறிவுரையின் பேரிலேயே இந்த ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதும் தெரியவந்துள்ளது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

இதையடுத்து, இந்த வழக்கில் அசோக்குமார் சேர்க்கப்பட்டு, அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாகியுள்ள அசோக்குமார் மற்றும் இந்தச் சதியின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்கிற தகவலும் தற்போது அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *