Sports
oi-Yogeshwaran Moorthi
வாஷிங்டன்: போர்ச்சுகல் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது வாழ்நாளில் எத்தனையோ சாதனைகளை படைத்திருந்தாலும், ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் ஒரு கோல் கூட அடித்ததில்லை என்ற மோசமான சாதனை அவரின் கால்பந்து வாழ்க்கையில் கரும்புள்ளியாகவே இருந்து வந்தது. அந்த கரும்புள்ளியை ரொனால்டோ நேற்றிரவு அகற்றி புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை எதிர்த்து வலிமை வாய்ந்த குரோஷியா அணி களமிறங்கியது. 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் குரோஷியா அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அந்த அணியின் ஜாம்பவானான லூகா மோட்ரிக்கின் கடைசி கால்பந்து உலகக்கோப்பை இதுவாகும்.

இதனால் போர்ச்சுகல் அணியால் குரோஷியாவை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்ப குரோஷியா அணியின் இவான் பெரிசிக் 53வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் குரோஷியா முன்னிலை பெற்றிருந்த சூழலில், ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அந்த பெனால்டியை பெனால்டி ஸ்பெஷலிஸ்ட் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்கி அசத்தினார். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரலாற்றில் ரொனால்டோ அடிக்கும் முதல் கோல் இதுவாகும். சுமார் 20 ஆண்டுகளாக உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் ரொனால்டோவுக்கு (Cristiano Ronaldo) இதுதான் முதல் கோல் என்பதால், அவரும், அவரது அணியினரும், ரசிகர்களும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டனர்.
இதன் மூலமாக ரொனால்டோ மீது 20 ஆண்டுகளாக இருந்து வந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை நாக்கவுட் போட்டி ஒன்றில் 41 வயதில் கோல் அடித்த மிக மூத்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரொனால்டோ தன்வசப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 2ஆம் பாதியின் கூடுதல் நிமிடத்தில் போர்ச்சுகல் ஒரு கோலை அடித்து 2-1 என்ற கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தியது.
இதன் மூலமாக குரோஷியா அணியை வெளியேற்றி போர்ச்சுகல் அணி அடுத்தச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. ஆட்டத்தின் கடைசி நொடியில் குரோஷியாவின் ஜோஸ்கோ கிவார்டியோல் ஒரு கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்ததாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், விஏஆர் சோதனையில் அது ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டதால் குரோஷியா ரசிகர்களுக்குப் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தப் போட்டியின் 81வது நிமிடத்தில் ரொனால்டோ சப்ஸ்டிடியூட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டாலும், அவரின் பெனால்டி கோல் போர்ச்சுகல் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் ரொனால்டோ ரசிகர்கள் சோசியல் மீடியாவில் நேரடியாக மெஸ்ஸி ரசிகர்களை வம்புக்கு இழுக்க தொடங்கியுள்ளனர்.