'செந்தில் பாலாஜியோடு தனியே என்ன பேசினீர்கள் என்பதையும்.!' – சி.வி சண்முகம் தரப்புக்கு அதிமுக பதிலடி

Spread the love

அதிமுகவில் கலகக்குரல் வெடித்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையில் ஒரு குழு என அதிமுக இரண்டாக பிளவுபட்டிருக்கிறது.

எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான குழு இணைந்து தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்திருக்கின்றனர். தவிர ‘திமுக ஆதரவோடு முதலமைச்சராகலாம் என்றார் பழனிசாமி இதைக் கேட்டு நாங்கள் பேரதிர்ச்சிக்குள்ளானோம்’ என்று சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம்சாட்டியிருந்தார்.

எம்.ஜி.ஆர் மாளிகை
எம்.ஜி.ஆர் மாளிகை

இந்நிலையில் அதிமுக தலைமை கழகம் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறது.

“சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது! திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?

அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா? அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?

பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா? கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?

1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக! அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்? மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!

எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்! எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்! இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *