ஐபிஎல் தொடர் முடிந்தாலும், அணிகளுக்குள் நடக்கும் மாற்றங்கள் குறித்த பரபரப்புக்கு ஒருபோதும் குறைவிருக்காது. அந்த வகையில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப் பெரிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இருவரும் அணியிலிருந்து வெளியேறப் போவதாக வெளியாகும் செய்திகள், மும்பை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மும்பை அணியின் புதிய சகாப்தத்திற்கான தொடக்கமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ஹர்திக் – என்ன காரணம்?
குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மும்பை அணிக்கு கேப்டனாக அழைத்து வரப்பட்டார் ஹர்திக் பாண்டியா. ஆனால், இந்த சீசன் அவருக்குச் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. அணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் வீரர்களுடனான அதிருப்தி காரணமாக, அணியை விட்டு வெளியேற விரும்புவதாக அவர் நிர்வாகத்திடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. RevSportz வெளியிட்ட அறிக்கையின்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஹர்திக் பாண்டியாவுக்கான டிரேடிங் டீல் குறித்து மும்பை நிர்வாகம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்கிறார்கள்.
ஜெய்ஸ்வாலுக்கு ஜாக்பாட்… மும்பைக்கு வருகிறாரா?
ஹர்திக் பாண்டியாவை ராஜஸ்தான் அணிக்குக் கொடுத்துவிட்டு, அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தங்கள் அணிக்குக் கொண்டுவர மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. இந்த மாற்றம் ஜெய்ஸ்வாலுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம். ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் வெளியேறிய பிறகு, ஜெய்ஸ்வால்தான் அணியின் அடுத்த பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. கேப்டன் பதவிக்கான போட்டியிலும் அவர் பெயர் இருந்தது. ஆனால், நிர்வாகம் ரியான் பராக்கிற்கு அந்தப் பொறுப்பை வழங்கியது. இதற்கிடையில், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி என்ற இளம் வீரரின் வருகையும் ஜெய்ஸ்வாலின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளது. தனது சொந்த ஊரான மும்பை ரஞ்சி அணிக்காக ஆடும் ஜெய்ஸ்வால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவது அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.