பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை (ED) கோரியுள்ள அனுமதி தொடர்பான கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்குமாறு தமிழக அரசு ஆளுநர் அர்லேகரிடம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், நேற்று ஆளுநரை நேரில் சந்தித்து அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமலாக்கத்துறை முன்வைத்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, அமலாக்கத்துறையின் கோரிக்கையைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசு ஜூன் மாத முதல் வாரத்தில் ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பியிருந்தது. ஆனால், இதுவரை அந்த கோப்புகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
செந்தில் பாலாஜி தொடர்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறி பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையாகக் கொண்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் அவரது சகோதரர் மற்றும் உதவியாளர்கள் தொடர்புடையதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.