இந்தியத் திரையுலகின் ‘திரைக்கதை மன்னன்’ என்று அழைக்கப்படும் கே. பாக்கியராஜ் ஜூன் 27-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
அவரது திடீர் மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவரது உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அரசு மரியாதை அறிவித்த முதல்வர் விஜய்க்கு சாந்தனு நேற்று தனது பதிவு மூலம் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்திய திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “திரையுலகமே என் தந்தையின் உலகம் என்றிருந்து, பின் அது எனக்குமான உலகமாக இன்னும் அகலமாக விரிந்து ஒரு குடும்பமாக நெருங்கி, உயர்வான உறவாக உருவாகிவிட்டது.

விழுது மரமாகுமுன் விழுந்துவிட்ட ஆலமரமாய் என் தந்தையை இழந்த அன்று நான் பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாகவும், தடுமாறிய என் கால்களைத் தாங்கிக் கொண்ட பூமியாகவும், வெடித்து விடுமுன் எனக்காக துடித்த மாற்று இதயமாகவும் இருந்த / இருக்கின்ற / இருக்கப்போகின்ற திரையுலக ஜாம்பவான்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தவிர வேறென்ன சொல்லி என்னை நான் சமாதானபடுத்திக் கொள்ள?” என்று தெரிவித்திருக்கிறார்.