சென்னை: அதிகாலையில் இளம்பெண் கொடூரக் கொலை; மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு தப்பிய நபர்

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா (29). இவரின் கணவர் அசோக். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக ரேஷ்மா, கணவர் அசோக்கைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், ரேஷ்மா, தன்னுடைய அத்தை மகன் விஜி என்பவருடன் பழகி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷ்மாவுக்கும் அவரின் அத்தை மகன் விஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ரேஷ்மாவை மிரட்டி விட்டு விஜி சென்றிருக்கிறார்.

இதையடுத்து ரேஷ்மா, தன்னுடைய தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து தூங்கியிருக்கிறார். சம்பவத்தன்று அதிகாலையில் ரேஷ்மா தங்கியிருந்த வீட்டின் கதவை விஜி தட்டியிருக்கிறார். ஜன்னல் வழியாகப் பார்த்த ரேஷ்மா கதவைத் திறக்கவில்லை.

சடலமாக ரேஷ்மா

இந்தச் சமயத்தில் ஜன்னல் வழியாக கையை உள்ளே விட்ட விஜி, கதவைத் திறந்து உள்ளே சென்றிருக்கிறார். அப்போது இந்த நேரத்தில் எதற்காக நீ வந்தாய் என ரேஷ்மா சண்டை போட, விஜி மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை ரேஷ்மா அவரின் தோழிகளின் முகத்தில் வீசியிருக்கிறார். அதனால் நிலை குலைந்த பெண்கள், அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விஜி, ரேஷ்மாவைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ரேஷ்மா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த ரேஷ்மாவின் தோழிகள், சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கொலை செய்யப்பட்ட ரேஷ்மா உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள விஜியைத் தேடி வருகிறார்கள்.

இந்தக் கொலை குறித்து நம்மிடம் பேசிய சங்கர் நகர் போலீஸார், “ரேஷ்மாவை கொலை செய்த விஜியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தனிப்படை போலீஸார் விஜியை நெருங்கி விட்டனர். அவரிடம் விசாரித்தால்தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *