International
oi-Nantha Kumar R
கராகஸ்: வெனிசுலாவில் நேற்று மாலையில் சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து உருக்குலைந்துள்ளன. இந்நிலையில் தான் நிலநடுக்கத்துக்கு சில நொடிகளுக்கு முன்பு கூகுளில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன்களுக்கு வார்னிங் செய்யப்பட்டுள்ளது. எப்படி நடந்தது? இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறியலாமா? என்ற விவாதம் கிளம்பி உள்ளது.
தென்அமெரிக்கா நாடாக வெனிசுலா உள்ளது. இந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடல் மட்டுமே உள்ளது. இந்நிலையில் தான் நேற்று யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் வெனிசுலாவில் அடுத்தடுத்து இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவிலும், அடுத்த சில நொடிகளிலேயே அடுத்ததாக 7.5 ரிக்டர் அளவில் இன்னொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இதில் வெனிசுலாவில் உள்ள கட்டங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து தரைமட்டமாகின.
தற்போது மீட்பு பணி வேகமாக நடந்து வருகிறது. இதுவரை மொத்தம் 164 பேர் பலியாகி உள்ளனர். 971 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல நூறு பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தான் வெனிசுலாவின் நிலநடுக்கம் குறித்த அலர்ட்டை கூகுள் சில வினாடிகளுக்கு முன்பு ஆண்ட்ராய்டு செல்போன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்ட்ராய்டு செல்போன்களில் நிலநடுக்கம் பற்றி அறிவதற்கான வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு செல்போனில் Settings – Safety& Emergency – Earthquake alerts என்பதை ஆன் செய்தால் போதும். நிலநடுக்கம் ஏற்படும்போது அதுபற்றிய அலர்ட் மெசேஜ் கூகுளில் இருந்து அனுப்பி வைக்கப்படும். கூகுளில் ‘ஆண்ட்ராய்டு எர்த்குவேக் அலர்ட்ஸ் சிஸ்டம்’ (Android Earthquake Alerts System) உள்ளது.
இதுதான் நிலநடுக்க அலர்ட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வெனிசுலாவில் பல லட்சம் பேருக்கு நிலஅதிர்வு தொடர்பான வார்னிங் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் உள்ள ‘ஆக்சிலரோமீட்டர்கள்’ (accelerometers) நிலநடுக்கத்தின் ஆரம்பகட்ட அலைகளான ‘P-அலைகளை’ (P-waves) கண்டறிகின்றன. இவை கடும் சேதத்தை ஏற்படுத்தும் ‘S-அலைகளை’ (S-waves) விட வேகமாக பயணிக்கக்கூடியவை. அதனடிப்படையில் கூகுள் இந்த மெசேஜை அனுப்பி வைத்துள்ளது.
இதுபற்றி ‘BOTS.Ai’ நிறுவனத்தின் இயக்குநர் நிகார் அரோரா கூறுகையில், ”நிலநடுக்க எச்சரிக்கை அமைப்புகள் எந்த அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ளன என்பதை வெனிசுலா சம்பவம் நிரூபிக்கிறது. பலர் நினைப்பது போல, கூகுள் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கவில்லை. மாறாக, நிலநடுக்கத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகளை கண்டறிந்து, கடுமையான அதிர்வுகள் தொடங்குவதற்கு முன்பே எச்சரிக்கையை அனுப்பியுள்ளது” என்றார்.
இந்த சம்பவம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலநடுக்கத்தால் ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். இப்படி இருக்கும்போது இத்தகையை தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்தி நிலநடுக்கம் பற்றிய முன்னெச்சரிக்கையை பெற முடியுமா? என நெட்டிசன்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி ‘என்விரோகேர் ஃபவுண்டேஷன்’ (Envirocare Foundation) அமைப்பின் இணை நிறுவனர் ஹிருஷித் பந்த்ரி கூறுகையில், ”வெனிசுலாவில் நடந்த இந்த சம்பவம் பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்துவதிலும், சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் தொழில்நுட்பத்தின் பங்கை காட்டுகிறது. நிலநடுக்கங்களை முன்கூட்டியே கணிப்பது சாத்தியமற்றது என்றாலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றை உடனுக்குடன் கண்டறிந்து, உயிர்ச்சேதங்களையும் பாதிப்புகளையும் தவிர்க்க வேகமாக தகவல் அனுப்ப முடியும்.
நகரங்களின் விரைவான வளர்ச்சி மற்றும் அதிக முதலீட்டில் உருவாகும் உள்கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க இதுபோன்ற விஷயங்களில் முதலீடு செய்வது அவசியமாகிறது. ஸ்மார்ட்போன்களை ஏறக்குறைய அனைவரும் பயன்படுத்துகின்றனர். இதனால் அவசர காலங்களில் மக்களுக்குத் தேவையான பாதுகாப்புத் தகவல்களை உடனடியாக வழங்கலாம். காலநிலை மாற்றம் மட்டுமின்றி வெள்ளம், புயல், தீவிர வெப்ப அலைகள் போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்கள் தொடர்பான அலர்ட்டுகளை வழங்க வேண்டும்” என்றார்.