வெளிப் பிராகாரத்தில் நாகர்கள், சுயம்பு, சண்டிகேஸ்வரர், பட்டீஸ்வரர், கால பைரவர், நவகிரகங்கள், சனீஸ்வரர், சந்திரன், சூரியன் ஆகியோர் சந்நிதிகொண்டு அருள்கின்றனர்.
மேலும் அர்த்த மண்டபத்தில் நடராஜர், பாலசுப்ரமணியர், உற்சவ மூர்த்திகள் காட்சி அருள்கின்றன. பாலசுப்ரமணியர் 4 திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்கிறார். மேல் கைகள் அட்சமாலை மற்றும் கமண்டலம் தாங்கி நிற்க கீழ் வலது கை அபய ஹஸ்தம், மற்றும் இடது கையில் கடி ஹஸ்தம் காட்டி அருள்கிறார் பாலசுப்பிரமண்யர்.
இந்தத் திருக்கோலத்தை பிரம்ம சாஸ்தா என்று போற்றுவர். இவரை வழிபட்டால் கல்வியில் மேன்மை உண்டாகும். ஞானம் ஸித்திக்கும்.

தொண்டைநாட்டில் உள்ள பெரும்பாலான கஜபிருஷ்ட விமானங்கள் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டவை; எனவே, இக்கோயிலும் 8 முதல் 9-ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் புனரமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் சோழர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம்.
இவற்றின் தூண்கள் சதுர மற்றும் எண்கோண வடிவில் உள்ளன. மகா மண்டபத்தின் இடது புற கிழக்கு நுழைவாயிலில், உடைந்த தூண் ஒன்றின் துண்டு நிறுவப்பட்டுள்ளது. இந்தத் தூண் விஜயநகர காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார்கள்.
இப்படி சரித்திரப் புகழும் புராண சிறப்பும் வாய்ந்த இந்தத் தலத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஞானமும் கல்வியும் செல்வமும் சேர்ந்து கிடைக்கும். முன்வினை சாபங்கள் தீரும்.