காஞ்சிபுரம், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரின் மகன் அருண்குமார் (39). இவர் செம்பாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் 14.8.2026-ம் தேதி அருண்குமார், திடீரென உயிரிழந்தார்.
அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள், சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையில் உயிரிழந்த அருண்குமாரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் செங்கல்பட்டுஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண்குமார் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதாகவும் அவரின் உடலில் உள்காயங்கள் இருப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சில ஆதாரங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் மறுவாழ்வு மையத்தின் கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் குணசீலன், ஏழுமலை, ராஜ்கமல், ராஜசுதாகர் ஆகியோர் சேர்ந்து அருண்குமாரை கொடூரமாக தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சேலையூர் போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட அருண்குமார், போதை பழக்கத்துக்கு அடிமையானவர். அதனால் அவரின் மனைவி பிரிந்துச் சென்றுவிட்டார். அதன்பிறகு மனஉளைச்சலுக்குள்ளான அருண்குமாரின் நடவடிக்கையால் அவரின் குடும்பத்தினர் இந்த போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அங்கு சிகிச்சை என்ற பெயரில் அருண்குமாரை கொடூரமாக ஊழியர்களும் சிகிச்சைக்கு வந்த பிற நபர்களும் தாக்கியதில் அவர் உயிரிழந்து விட்டார். அதை மறைக்க ஊழியர்கள் முயன்றனர். ஆனால், போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளும் டாக்டர்களின் தகவல்களும் கொலையை காட்டிக் கொடுத்துவிட்டது.

சம்பவத்தன்று அருண்குமார், சத்தம் போட்டிருக்கிறார். அதனால் மையத்தின் கண்காணிப்பாளரான மணிகண்டனும் அங்கிருந்த சிலரும் சேர்ந்து அருண்குமாரின் கை, கால்களை கயிற்றால் கட்டியிருக்கிறார்கள். பின்னர் சத்தம் போடாமலிருக்க அருண்குமாரின் வாயில் துணிகளை அடைத்திருக்கிறார்கள். இதில் அருண்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவு செய்த இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து மணிகண்டன் உள்பட 5 பேரைக் கைது செய்திருக்கிறோம்” என்றனர்.