சென்னை: பெரியப்பா, அப்பா கொலைக்குப் பழிவாங்கிய மகன் – தவெக நிர்வாகி கொலையில் அதிர்ச்சித் தகவல்கள்

Spread the love

சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், ஐ.டி நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

சாஸ்திரி நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு ரௌடிகள் பட்டியலிலும் கண்ணனின் பெயர் இருந்து வந்தது. இந்நிலையில் 5-ம் தேதி இரவு வண்ணான்துறை, ராமசாமி அவென்யூ, எல்லையம்ன் கோயில் தெருவில் நின்று கண்ணன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்குகளில் வந்த மர்ம கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் கண்ணைச் சரமாரியாக வெட்டியது. அவர் தப்பி ஒடாமலிருக்க காலிலேயே வெட்டியது அந்தக் கும்பல். அதைப் பார்த்த அவரின் நண்பர்கள், மர்ம கும்பலை மீது கற்களை வீசினர். ஆனால், மர்ம கும்பல் கண்ணனின் நண்பர்களை மிரட்டியதோடு கண்ணனைக் கொடூரமாக வெட்டி சாய்த்தது.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் கண்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து கொலையை நேரில் பார்த்த கண்ணனின் சித்தி மகன் புருஷோத்தமன் என்பவர், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து கொலை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். இந்தச் சூழலில் கொலை நடந்த சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

சி.சி.டி.வி காட்சி
சி.சி.டி.வி காட்சி

இதையடுத்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் கார்த்திக்கேயன் தலைமையில் போலீஸ் டீம் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தது.

சி.சி.டி.வி கேமரா பதிவுகளின்படி இந்தக் கொலையில் ஈடுபட்டது அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த பரணி (20), கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்த ராகேஷ் (20), பெரியார் நகரைச் சேர்ந்த நரேஷ்(20), கோட்டூரைச் சேர்ந்த மணிகண்டன்(20), இந்திரா நகரைச் சேர்ந்த ஹரிஹரன்(20) ஆகியோர் எனத் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் கூறுகையில், “கண்ணனைக் கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ளது பரணியின் பெரியப்பா சிவா. இவரை 2009-ம் ஆண்டு தொழில் போட்டியில் ஒரு கும்பல் கொலை செய்தது. இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட த.வெ.க நிர்வாகியும் ரௌடியுமான கண்ணனும் கைது செய்யப்பட்டார்.

சிவா கொலைக்குப் பிறகு அவரின் தம்பியும் பரணியின் அப்பாவுமான வேலு என்பவரை சைதாப்பேட்டையில் வைத்து 2016-ம் ஆண்டு ஒரு கும்பல் கொலை செய்தது. இந்தக் கொலையிலும் கண்ணனுக்குத் தொடர்பு இருப்பதாக பரணியின் குடும்பத்தினர் சந்தேகித்தனர்.

இந்தநிலையில்தான் அ.தி.மு.கவிலிருந்த கண்ணன், சில மாதங்களுக்கு முன்பு த.வெ.க-வில் இணைந்தார். அதன்பிறகு கண்ணன், வழக்கம் போல தன்னுடைய அன்றாட பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அடையாறு துணை கமிஷனர் கார்த்திக்கேயன்

கண்ணனின் செல்வாக்கு ஏரியாவில் அதிகரித்து வந்ததால் அவரைக் கொலை செய்ய வேலுவின் மகன் பரணி தன்னுடைய நண்பர்களுடன் திட்டமிட்டு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட கண்ணன், ரௌடிகள் பட்டியலில் இருப்பதால் அவரை லோக்கல் போலீஸார் கண்காணிக்க வேண்டும்.

அதைச் செய்யாததால் அடையாறு துணை கமிஷனர் கார்த்திக்கேயன், சாஸ்திரி நகர் இன்ஸ்பெக்டர் ரோகினி ஆகியோரை உடனடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அடையாறு துணை கமிஷனராக ஸ்டீபன் நியமிக்கப்பட்டிருக்கிறார். கண்ணன் கொலைக்குப் பழிக்குபழியே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது” என்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கைது செய்யப்பட்ட பரணி, கல்லூரி மாணவன். பரணி குடும்பத்துக்கும் கண்ணன் குடும்பத்துக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. அதனால், கண்ணன் தரப்பு பரணியின் குடும்பத்தினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

அப்போது கண்ணன் தரப்பு, இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து விலகிய கண்ணன், த.வெ.க-வில் இணைந்து ஆக்டிவ்வாக வேலை செய்து வந்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் அவர் போட்டியிடவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் இந்தக் கொலை நடந்திருக்கிறது. அதுதொடர்பாகவும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *