சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் …கறுப்பு உடையில் வந்த மேயர் பிரியா..! – Kumudam

Spread the love

சென்னை மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி வழங்கப்படவில்லை என்றும், வேளச்சேரி மேம்பாலம் உள்ளிட்ட சில முக்கியத் திட்டங்களும் முன்னேறாமல் இருப்பதாகவும் மாநகரட்சி நிர்வாகம் குற்றஞ்சாட்டுகிறது. 

மேலும், மாநகராட்சிக்காக பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு உரிய தொகை வழங்கப்படாதது தொடர்பாகவும் புகார்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்காக ஆண்டுதோறும் மாநகராட்சி கணிசமான தொகையை செலவிட்டு வருவதோடு, காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு உணவு கொண்டு செல்லும் போக்குவரத்துச் செலவையும் மாநகராட்சியே ஏற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களுக்கான செலவினங்களை சமாளிக்க தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில், மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்காக கடன் பெற்று செலவினங்களை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டு சிறப்பு நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை மேயர் மகேஸ் குமார் வலியுறுத்தியுள்ளார். 

மாநகராட்சிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மேயர் பிரியா அண்மையில் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், நகராட்சி நிர்வாகத் துறையின் பொறுப்பை கவனித்து வரும் முதலமைச்சரிடம் மாநகராட்சி ஆணையர் நேரடியாக பேசி தேவையான நிதியைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் மகேஸ் குமார் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்கான நிதி விவகாரம் தற்போது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ள நிலையில், மேயர் ப்ரியா உட்பட திமுக கவுன்சிலர்கள் அனைவரும் இன்று(ஆகஸ்ட் 28) நடந்த மாதாந்திர மன்றக் கூட்டத்திற்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்து எதிர்ப்பை பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *