கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் வேலை செய்து வந்தார். இவருடன் ரஞ்சித்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார். ரஞ்சித்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 24 வயதுடைய பெண்ணிடம் பழகி வந்திருக்கிறார். அதன் பிறகு அந்தப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரஞ்சித்குமார் லவ் டார்ச்சர் செய்திருக்கிறார். அதற்கு அந்தப் பெண், `நான் ஏற்கெனவே வேறு ஒருவரை காதலிக்கிறேன். அதனால் என்னை டார்ச்சர் செய்யாதீர்கள்’ என ரஞ்சித்குமாரிடம் பல தடவை கூறியிருக்கிறார். ஆனால் ரஞ்சித்குமார் மனமாறாமல் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார்.

இதனால் அப்பெண் வேலையிலிருந்து நின்றுவிட்டார். அதன் பிறகும் ரஞ்சித்குமார் அந்தப் பெண்ணை மிரட்டி வந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணின் போட்டோவை தன்னுடைய போட்டோவுடன் இணைத்து மார்பிங் செய்த ரஞ்சித்குமார், அதை அந்தப் பெண்ணுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் காதலனிடமும் போட்டோ குறித்துப் பேசிய ரஞ்சித்குமார், அவரையும் மிரட்டியிருக்கிறார். ரஞ்சித்குமாரின் இத்தகைய டார்ச்சரால் மனமுடைந்த அப்பெண், ரஞ்சித்குமார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரஞ்சித்குமாமரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆதாரங்கள் அடிப்படையில் ரஞ்சித்குமாரைக் கைதுசெய்த போலீஸார், குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரஞ்சித்குமார், சிறையில் அடைக்கப்பட்டார்.