புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி முன்னாள் அதிமுக அமைச்சரான மறைந்த வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பியை அண்ணனே கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் வெங்கடாசலம். ஆலங்குடி பகுதியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த இவரை 2010 , அக்டோபர் 7 ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் அவருடைய வீட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்தது.
முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மூத்த மனைவியின் மகன் ராஜபாண்டியன். இவர் அதிமுக ஜெ பேரவை நிர்வாகி ஆவார். இளைய மனைவியின் மகன் ராஜராஜன் விவசாயி.
இவர்களுக்கு இடையே குடும்பச் சொத்து ஏற்கனவே பிரிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், தனக்கு பங்கு இருப்பதாகக் கூறி தம்பி ராஜராஜனை வீட்டிற்குள் விடாமல் ராஜபாண்டியன் மிரட்டி வந்துள்ளார்.
இதனால் வீட்டைப் பூட்டி ராஜராஜனை வெளியேற்றியதால், அவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டில் தங்கி வந்தார். பின்னர் வீட்டை மீட்க நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற ராஜராஜன், நேற்று (செப்டம்பர் 2) போலீஸாரிடமிருந்து வீட்டின் சாவியைப் பெற்றார்.
இன்று (வியாழக்கிழமை) காலை ராஜராஜன் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த ராஜபாண்டியன் அரிவாளால் வெட்டப் பாய்ந்துள்ளார். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் பதுங்கிய தம்பியை விடாமல் துரத்திய அண்ணன் ராஜபாண்டியன், கத்தியால் குத்தியதுடன், அங்கிருந்த சிலிண்டரைத் தூக்கி தலையில் போட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
இதில் ராஜராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தம்பியைக் கொலை செய்த அண்ணனை கைது செய்யக்கோரி உறவினர்களும் பொதுமக்களும் பட்டுக்கோட்டை – புதுக்கோட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.