இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அயனாவரம் கிளையில் மேலாளராக இருப்பவர் தினேஷ்குமார். இவர், 13.8.2026-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், அயனாவரம் கிளையின் உதவி மேலாளராக பணியாற்றிய பொட்னூரு முரளி கிருஷ்ணா என்பவர் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த தங்க நகைகளை திருடிச் சென்று அதற்கு பதிலாக போலி நகைகளை வங்கியில் வைத்து மோசடி செய்திருக்கிறார். வங்கியில் திருடப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு 3 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரனையைத் தொடங்கினர்.

விசாரணையில் அயனாவரம் கிளையில் 21 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 2,179 கிராம் தங்க நகைகளுக்குப் பதில் போலியான நகைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அது தொடர்பாக உதவி மேலாளர் பொட்னூரு முரளிகிருஷ்ணா என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், வங்கியில் அடகு வைத்த நகைகளை வைத்திருக்கும் லாக்கரின் சாவி தன்னிடம் இருந்ததால் யாருக்கும் தெரியாமல் தங்க நகைகளைத் திருடி, அதை வேறு இடங்களில் அடகு வைத்திருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் அதன்மூலம் கிடைத்த பணத்தை ஆன்லைன் விளையாட்டிலும் (Online Game) சொந்த செலவுக்கும் பயன்படுத்தி விட்டதாகவும் போலீஸாரிடம் உதவி மேலாளர் கூறியிருக்கிறார். இதையடுத்து உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணாவை (34) போலீஸார் கைதுசெய்தனர். இவர், சென்னை புரசைவாக்கத்தில் குடியிருந்து வருகிறார். இவரின் சொந்த ஊர், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம். விசாரணைக்குப் பிறகு உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து வங்கியிலிருந்து திருடப்பட்ட தங்க நகைகளை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.