செப்டம்பர் 1 முதல் புதுப் படங்கள் ரிலீஸ் இல்லை! – தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன?

Spread the love

திரையரங்கில் வெளியாகி 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் எனப் பல நாட்களாகத் திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்து வருகிறது.

ஆனால், அப்படிச் செய்தால் படங்களின் வருவாய் பாதிக்கப்படும், ஏற்கெனவே நஷ்டத்தைச் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து வருகிறது.

திருப்பூர் சுப்ரமணியம் - திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர்
திருப்பூர் சுப்ரமணியம் – திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர்

செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வார காலம் கழித்துதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான், அந்தந்தத் திரைப்படங்களைத் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவைத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்றுக்கொள்ள இயலாது எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், “தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் 22.08.2026 அன்று காலை வேளையில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூட்டி, தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வார காலம் கழித்துதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான், அந்தந்தத் திரைப்படங்களைத் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.

Theatre
Theatre

மேலும், இந்த மாதிரியான முடிவு, தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நடைமுறையில் இல்லாதபோது, வேண்டுமென்றே தமிழ்நாட்டில் மட்டும் இந்த புதிய நடைமுறையைத் தன்னிச்சையாகப் புகுத்துவது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இவ்வாறான முடிவினை எடுக்கும்போது தயாரிப்பாளர்களை அழைத்துப்பேசி யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

ஆனால், விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அப்படித் தயாரிப்பாளர்களைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவினைத் தயாரிப்பாளர்களான எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதைத் தெரிவிக்கிறோம்.

மேலும், வருடத்திற்கு 250 திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் பெரும்பாலான திரைப்படங்களில் தயாரிப்பாளருக்கு முதலீடு செய்த தொகையில் பாதி அளவு கூட வராமல், ரூ. 700 கோடிக்கு மேல் ஒவ்வொரு வருடமும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு பெரும் இழப்பினைச் சந்தித்தும் தயாரிப்பாளர்கள் தொழில் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

எனவே, விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவினைக் கண்டித்து வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழ்த் திரையுலகில் புதிய திரைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், தமிழ்த் திரையுலகில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்துவது என்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து முடிவெடுத்துள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை
தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

மேலும், மேற்படி பிரச்சினையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசென்று, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவர்களிடமும் எடுத்துரைத்து தமிழ்நாடு அரசு மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உள்ளோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *