India
oi-Halley Karthik
பாட்னா: நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்க்கரை விலை அதிகரித்திருக்கிறது. இப்படி இருக்கையில்.. எல்லோருக்கும் சுகர் பாதிப்பு இருக்கு! அதனால சர்க்கரை விலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பீகார் அமைச்சர் பேசியிருக்கிறார். அவரது பேச்சு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
பீகாரின் ஐக்கிய ஜனதா தள அமைச்சரான ஸ்ரவண் குமார், “தற்போது சர்க்கரை நோய் மற்றும் அதற்கு முந்தைய நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் ஸ்வீட் சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். பலர் ஸ்வீட் எடுத்துக்கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். எனவே சர்க்கரை விலை உயர்வு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எனக்கு தோன்றவில்லை” என பேசியிருக்கிறார்.

பல பேருக்கு டீ, காபிதான் காலை உணவாகவே இருக்கிறது. அதுக்கு சர்க்கரை தேவை. ஆனால் சர்க்கரை விலை ஏற்றம் காரணமாக டீ, காபி விலையும் அதிகரித்திருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் பீகாரில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.16 அதிகரித்து ரூ.64க்கு விற்கப்படுகிறது. மக்கள் விலை ஏற்றம் காரணமாக கஷ்டப்படுகிறார்கள். நிலைமை இப்படி இருக்கையில் சர்க்கரை விலை உயர்வு குறித்து அமைச்சர் ஏடாகூடமாக பேசியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது எனில்.. பூமி சூடாகுது.. அதனால பெட்ரோல், டீசல் உயர்வு நல்லது என சொல்ல முடியுமா? என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளும் ஸ்ரவண் குமாரை வறுத்தெடுக்க தொடங்கியிருக்கின்றன.
“அமைச்சர் ஸ்ரவண் குமார், ஒரு டீ 100 ரூபாய்க்கு வித்தா கூட வாங்கி குடிப்பார். ஆனா சாதாரண மக்களுக்கு டீ 2 ரூபாய் விலை ஏறினால் கூட அதை வாங்கி குடிப்பது கஷ்டம். எனவே அமைச்சர் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் கூறியிருக்கின்றன.
சர்க்கரை விலை உயர்வு
நாடு முழுவதும் எத்தனால் கலந்த பெட்ரோல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இது விலை ஏற்றத்திற்கு முதல் காரணம். அதேபோல அடுத்தடுத்து வரும் பண்டிகைகள் காரணமாக சர்க்கரையின் டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. இதுவும் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாகும். விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. இந்த பிரச்சனையை உடனே மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.