சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லம் இன்று(ஆகஸ்ட் 04) காலை அரசியல் பரபரப்பின் மையமாக மாறியது. தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டத்தில் அவர் ஆற்றியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
காலை முதலே முன்னாள் அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உதயநிதியின் இல்லம் முன்பு திரண்டிருந்தனர். போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றபோது, திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்தப் பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
சுமார் காலை 11 மணியளவில் போலீசார் உதயநிதி ஸ்டாலினை வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்து காவல் வாகனத்தில் ஏற்றினர். இந்தக் காட்சியை செய்தியாளர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் பதிவு செய்து கொண்டிருந்த நிலையில், அருகில் வசிக்கும் சின்னத்திரை நடிகரும், முதலமைச்சர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவும் தனது வீட்டின் பால்கனியில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படும் நடிகர் சஞ்சீவ் பால்கனியில் இருந்து சம்பவத்தை பதிவு செய்வதை கவனித்த சில திமுக ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டை நோக்கி கோஷமிட்டு, வீடியோ எடுக்க வேண்டாம் என்று சத்தமிட்டதுடன், ”சஞ்சீவின் வீட்டை நோக்கி கைகளை அசைத்து, எதுக்கு வீடியோ எடுக்குற?.. ஏய்.. ஏய்.. போனை வை கீழ.. பொண்ணுங்க இருக்கறப்ப எடுக்கிற.. செருப்பால அடிப்பேன்.. ” என்று சத்தமிட்டுக் கூச்சலிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நிலைமை மேலும் பதற்றமடையாமல் இருக்க காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தினர். அதன்பின் நடிகர் சஞ்சீவ் வீடியோ பதிவு செய்வதை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட காட்சிகளுடன், நடிகர் சஞ்சீவ் பால்கனியில் இருந்து சம்பவத்தை பதிவு செய்ததும், அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

