வைகோ கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடும் நிகழ்ச்சி இன்று மாலை டெல்லியில் நடக்கிறது. புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில் இந்தப் புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் சமூக ஊடகம் வழியே சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதாவது வைகோவின் புத்தகத்தை வெளியிடத் தகுதியானவர் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு முறை இது குறித்துப் பதிவிட்டிருந்த சோ தர்மனிடம் பேசினோம்.

’’தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்குத் திட்டங்குளத்தில் திமுக கிளைச் செயலாளரா இருந்தவன் நான். ஒருகட்டட்துல எந்தக் கட்சியும் வேண்டாம்னுட்டு எழுத்துப் பக்கம் வந்துட்டேன். ஆனா அன்னைக்கு கோபால்சாமி கூட அரசியல் செஞ்சவங்கிற ஒரு முறையில என் கருத்தைச் சொன்னேன். இவ்ளோ வருஷம் டெல்லியில பேசினதை புத்தகமாக்குறது நல்ல விஷயம்தான். ஆனா டெல்லிக்கு இவ்வளவு காலமும் உங்களை அனுப்பி வச்சது யாருங்கிறது முக்கியமில்லையா?
மனுஷனா பிறந்தா நன்றி விசுவாசம் இருக்கணும்ங்க. நான் கூடதான் சாகித்ய அகாடமி விருது வரைக்கும் வாங்கிட்டேன். ஆனா இன்னைக்கும் எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் கி.ரா-வைத் தொடாம என் பேச்சை முடிக்கவே மாட்டேன். காரணம் எனக்கு இந்தத் துறையில் பாதையைக் காட்டினார்.