சேலம் மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. கஞ்சாவில் தொடங்கி போதை மாத்திரை, ஊசிகள் வரை பல்வேறு போதைப் பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமயாகி வருகின்றனர். போதை இளைஞர்களால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் குற்றச் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சேலம் மாவட்டம், எருமபாளையம் பகுதியில் தலைக்கேறிய போதையில் நேற்றிரவு இன்னோவா கரை ஓட்டிச் சென்ற சில நபர்கள் கட்டுப்பாடு இல்லாமல் 4 இடங்களில் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

விபத்துகளை ஏற்படுத்திவிட்டு காரை நிறுத்தாமல் சென்ற அவர்களை மக்கள் பின்தொடர்ந்து விரட்டியிருக்கிறார்கள். தப்பித்துச் செல்கிறோம் என்கிற பெயரில் கார் டயர் பஞ்சரான நிலையிலும் தீப்பொறி பறக்க சாலையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றிருக்கிறார்கள். காரில் இருந்த 4 பேரையும் உள்ளூர் மக்கள் சிறைபிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 4 பேரும் கஞ்சா போதையில் இருந்ததாக மக்கள் கூறியிருக்கிறார்கள். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதையில் 4 இடங்களில் விபத்தை ஏற்படுத்திவிட்டு காரை நிறுத்தாமல் தீப்பொறி பறக்க ஓட்டிச் செல்லும் வீடியோ காண்போரை பதற வைக்கின்றன.