Cricket
oi-Yogeshwaran Moorthi
லண்டன்: இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் சீனியர் வீரர் ரோகித் சர்மா இருவரும் லார்ட்ஸ் மைதான பால்கனியில் நின்று ஜாலியாக ஆலோசிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் பிசிசிஐ நிர்வாகம் ரோகித் சர்மா – கம்பீர் இடையிலான மோதலில், டேமேஜ் கண்ட்ரோலில் ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்குவது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு இதுதான் கடைசி ஒருநாள் போட்டி என்று சொல்லப்பட்ட சூழலில், பிசிசிஐ விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முடிவு கட்டி இருக்கிறது.

இதனால் 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் திட்டத்தில் ரோகித் சர்மா இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ரோகித் சர்மா இடையிலான மோதல் முடிவுக்கு வரவில்லை என்று பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்கு பின் கவுதம் கம்பீர் வர வேண்டும் என்று விரும்பியவரே ரோகித் சர்மா தான்.
ஆனால் அப்படி வந்த கம்பீரே, நேரடியாக ரோகித் சர்மாவுக்கு ஆப்பு வைத்திருக்கிறார். 2005ல் இப்படிதான் கங்குலி மற்றும் கிரேக் சேப்பல் சம்பவமும் அரங்கேறியது. கிரேக் சேப்பல் தான் பயிற்சியாளராக வர வேண்டும் என்று கங்குலி பிடிவாதமாக இருந்து கொண்டு வந்தார். அப்படி வந்த பின் சேப்பல் செய்த முதல் சம்பவமே கங்குலியை நீக்கியது தான்.
இது இன்று வரை இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலமாகவே பார்க்கப்படுகிறது. மீண்டும் அப்படியொரு காலம் கம்பீர் மூலமாக அரங்கேறுகிறதோ என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் கம்பீர் மற்றும் ரோகித் சர்மா இடையிலான மோதல் சம்பவம் வெளியில் வந்துள்ளதால், பிசிசிஐ நிர்வாகம் டேமேஜ் கண்ட்ரோலில் ஈடுபட்டிருக்கிறது.
கவுதம் கம்பீர் மற்றும் ரோகித் சர்மா இருவரும் லார்ட்ஸ் மைதான பால்கனியில் ஜாலியாக ஆலோசிப்பதை போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இருக்கின்றன. இருப்பினும் எத்தனை நாட்களுக்கு கம்பீர் மற்றும் ரோகித் சர்மா தரப்பு சுமூக உடன்பாட்டில் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.