சேலம்: மீன் கடையில் நீர் காகம் இறைச்சி விற்பனை, அத்துமீறும் வேட்டை கும்பல்! அதிர்ச்சி பின்னணி – cormorant hunting case arrest .

Spread the love

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகில் உள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் நீர் காகம் ( Cormorant) இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் அந்த பகுதிக்குச் சென்ற வனத்துறையினர், மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் ஒரு கடையில் 24 நீர் காகங்களைக் கொன்று இறைச்சிக்காக வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். பாதுகாக்கப்பட வேண்டிய பறவை இனத்தை வேட்டையாடிய சசிகுமார் என்ற இளைஞனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சசிகுமாரிடம் இருந்த நீர் காகங்களின் இறைச்சியை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், “கோனேரிப்பட்டி பேரேஜ் சாலை மற்றும் அதனை ஒட்டிய காவிரி ஆற்றுப் பகுதிகளில் நீர் காகங்கள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த நீர் காகங்களை ஒரு கும்பல் ரகசியமாக வலைவிரித்துப் பிடிப்பது, விஷப் பொருள்களை பயன்படுத்தி வேட்டையாடுவது போன்ற தொடர் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்டையாடப்படும் நீர் காகங்களின் தோலை உரித்து இறைச்சியாக விற்பனை செய்து வருகின்றனர். நீர் காகங்கள் போன்ற காட்டுப் பறவைகளை வேட்டையாடுவதும், அதன் இறைச்சியை விற்பனை செய்வதும் கடுமையான குற்றமாகும். பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த இடங்களில் இது போன்ற நீர் பறவைகள் வேட்டையாடப்பட்டாலோ அல்லது இறைச்சி விற்கப்பட்டாலோ உடனடியாக அருகில் உள்ள வனத்துறைக்கோ அல்லது உணவுப் பாதுகாப்புத் துறைக்கோ தகவல் தெரிவிக்கவும். வேட்டையில் ஈடுபட்ட சசிகுமார் மீது வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது ” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *