புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. இளம் அமைச்சரவை அமைந்துள்ளது. இளைஞர்கள் பெருமளவு ஆதரவளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் இந்த அரசு இந்த மக்கள் பிரச்னைகளுக்கு இனி தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளைத் தரும் என்ற நம்பிக்கையுடன் வாக்காளர்கள் அரசை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
தமிழக அரசைப் பொறுத்தவரை, அரசு நிர்வாக சேவைகளை டிஜிட்டல் மயமாக்க பல்வேறு முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி 2018-ஆம் ஆண்டிலேயே ‘நம்ம சென்னை’ செயலியை அறிமுகப்படுத்தியது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிமைப் பிரச்னைகளை நேரடியாக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டது. சாலைகளில் உள்ள பள்ளங்கள், குப்பை அகற்றம், தெருவிளக்குப் பழுதுகள், மழைநீர் தேக்கம், கொசுத் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகளை புகைப்படங்களுடன் பதிவு செய்யும் வசதி இதில் உள்ளது. மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், மொபைல் மூலமாகவே புகார் அளிக்க முடிவது இதன் முக்கிய அம்சமாகும். மேலும், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல மாநகராட்சி சேவைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.