மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. காலையில் இருந்தே பா.ஜ.கவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்தது. ஆனால் பா.ஜ.கவின் எதிர்க்கட்சி தலைவர் சுவந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
அதோடு மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட பாபானிபூர் தொகுதியிலும் சுவந்து அதிகாரி முன்னிலை பெற்றார். கொல்கத்தா மாவட்டத்தில் அமைந்துள்ள பாபானிபூர் தொகுதி 2011 ஆம் ஆண்டு முதல் திரிணாமுல் கோட்டையாக இருந்து வருகிறது. அதில் சுப்ரதா பக்ஷி வெற்றி பெற்றார். வாக்குகள் எண்ணப்பட்டதில் பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் 100 தொகுதிகள் வரை சமமாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு நிலைமை தலைகீழாக மாறத்தொடங்கியது.
இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 80 முதல் 100 இடங்களை தாண்டாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. ஆனால் பா.ஜ.க-வின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது.
மதியம் 12 மணி நிலவரப்படி பா.ஜ.கவின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்தது. இதன் மூலம் ஆட்சியமைக்க தேவையான 148 இடங்களை கடந்து அறுதிப்பெரும்பான்மை இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. தங்களது கட்சி எப்படியும் ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்து இருந்தார்.
அவர் சொன்னபடி பா.ஜ.க முதன்முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த முறை 215 தொகுதியில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை 100க்கும் கீழே சரிந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தனது ஆட்சியை பா.ஜ.கவிடம் பறிகொடுத்து இருக்கிறது. அதற்கு முன்பு இடது சாரி கட்சிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல் முறையாக 2011ம் ஆண்டு முதல்வரானார். இப்போது மம்தா பானர்ஜியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கம் பா.ஜ.கவிடம் சென்று இருக்கிறது.
அதுவும் மம்தாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்த சுவந்து அதிகாரி மூலம் பா.ஜ.கவிடம் சென்றுள்ளது.