Tamilnadu
oi-Rajkumar R
சென்னை: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கட்சியிலிருந்து ஏற்கனவே 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் அதிமுகவில் மீண்டும் என்ட்ரி கொடுக்க காய்களை நகர்த்தி வருகிறாராம் சசிகலா. அதிமுகவின் சில முக்கிய முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு அவர் பேசியதாகவும், எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் தலைமை பதவியில் தொடர்ந்தால் அதிமுக அதலபாதாளத்துக்கு போய்விடும் என எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் நடப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் ஒரு அதிரடிக்கு தயாராகி வருகிறது. அதிமுகவின் அதிரடியாக எண்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம் ஜெயலலிதாவின் தோழியும், முதல்வர் ரேசில் இருந்தவருமான சசிகலா.
என்ன நடந்தது? என விசாரித்த போது மன்னார்குடி வட்டாரங்கள் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் பலர் சசிகலாவின் தொடர்பு எல்லைக்குள் வந்திருப்பதாகவும் சொல்கின்றனர்.

அதிமுக
தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சி, அடுத்தடுத்து இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் தோற்காத கட்சி. அடுத்தடுத்து இரண்டுமுறை என இரண்டு முறை தமிழகத்தை ஆண்ட கட்சி என பெருமை கொண்ட அதிமுக தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த கட்சி பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என பலர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து வெளியேறிய நிலையில் அல்லது வெளியேற்றப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் இணை ஒருங்கிணைப்பாளராக, பொதுச் செயலாளராக கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவரது தலைமையில் அதிமுக மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தல் வரை அதிமுக குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற முடியவில்லை. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக 2026 சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் திமுகவுக்கு தாவி விட்டனர்.
முன்னாள் அமைச்சர்கள்
இந்த நிலையில் எஸ்பி வேலுமணி, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில முக்கிய முகங்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அதே நேரத்தில் கடம்பூர் ராஜு, கே டி ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் தங்கள் தொகுதியிலேயே படுதோல்வியை சந்தித்தனர். இதற்கு இடையே எடப்பாடி பழனிச்சாமியின் தவறான கூட்டணி மற்றும் அரசியல் முடிவுகளால் தான் அதிமுக தோல்வியை சந்தித்தது இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் திரண்டனர்.
தவெக ஆதரவு
ஆனாலும் அதனையும் செய்யவிடாமல் கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் மிரட்டினார் எடப்பாடி. இதற்கிடையே சிவி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். எஸ் பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களை திரட்டி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் உலாவுகிறது. இதனால் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
சசிகலா
அதே நேரத்தில் அதிமுகவில் தடம் பதிக்க இதுதான் சரியான சமயம் என திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார் சசிகலா. அதிமுக இப்போது மிகவும் குழப்பமான சூழலில் உள்ளது. செல்வாக்கு கொண்ட தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவி வரும் நிலையில் தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியை எதிர்த்துப் பேச முடியாமலும், தவெகவுக்கு தாவ முடியாமல் தவித்து வருகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை போன்ற ஒரு சில காரணிகள் அவர்கள் கட்சி தாவுவதை தடுக்கிறது.
தனியாக ஆலோசனை
அதே நேரத்தில் அதிமுகவில் இருந்தால் தங்கள் அரசியல் எதிர்காலம் என்னாகுமோ என்ற கவலையும் அவர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் தான் அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என சசிகலா சில முன்னாள் அமைச்சர்களிடம் பேசி உள்ளாராம். முதல்வர் பதவி போன்ற எந்த அரசு பதவியும் தனக்கு தேவையில்லை, ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமி நம்பினால் அதிமுக அதல பாதாளத்துக்கு சென்று விடும். எனவே அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்கிறாராம்.
எடப்பாடிக்கு அதிர்ச்சி
மேலும், மூத்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், ஒன்றிய நிர்வாகிகளை சந்தித்து பேசுங்கள். விரைவில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவோம் என தனிப்பட்ட முறையில் பேசி வருகிறார். இதனை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிர்ச்சியில் இருப்பதோடு சசிகலா தரப்படும் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என மெசேஜ் அனுப்பி வருகிறார் என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தினர்.

