ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
வியட்நாமின் தெற்கு பகுதியில் சுற்றுலா தலமான ஃபூ குவொக் தீவுக்கு சென்ற 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் ஆகியோரை ஏற்றி சென்ற சுற்றுலா படகு திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. படகில் செல்லும் போது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை உயிருடன் மீட்டதாக முதற்கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து வியட்நாம் படகு விபத்தில் சிக்கி 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகப்பிரபு என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வியட்நாம் இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தள வலைப்பதிவில், வியட்நாமின் ஃபூ குவொக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு துர்திர்ஷ்டவசமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
விபத்துக்கான காரணம் மற்றும் பயணிகளின் நிலவரங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று பதிவிட்டுள்ளது. மேலும் படகு விபத்தில் சிக்கிய இந்தியர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவி மற்றும் விபத்து குறித்த சரியான தகவல்களையும் உடனுக்குடன் வழங்குவதற்காக ஹோ சி மின் நகரில் இந்தியத் தூதரகம் ஒரு அவசரக் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.
மேலும் இந்த வியட்நாம் படகு விபத்து குறித்து தகவல் அறிய தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் 1800 309 3793 என்ற கட்டணமில்லா உதவி எண்களை அழைக்கலாம். வெளிநாட்டில் தொடர்பு கொள்ள +91 80 6900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என்று அயலக தமிழர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

