International
oi-Vigneshkumar
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் உள்ள குமமோட்டோ என்ற மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுக்கின. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருக்கிறது. பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் நில அதிர்வு வளையத்தில் அமைந்துள்ளது அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இன்றைய தினமும் கூட அப்படி தான் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் நிலநடுக்கம்
ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள குமமோட்டோ மாகாணம் அருகே சக்திவாய்ந்த 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஒரு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் சுனாமி எச்சரிக்கை
ஜப்பான் அரசு குமமோட்டோ மட்டுமின்றி நாகசாகி, ககோஷிமா, ஃபுகுஓகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி உள்ளிட்ட கியூஷு தீவின் பல மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சுனாமி எச்சரிக்கை காரணமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் மீனவர்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லவும் ஜப்பான் பேரிடர் மேலாண்மை அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன. மீட்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
【地震速報】熊本県熊本地方で震度7 津波注意報 気象庁https://t.co/fAoIlTGbTd pic.twitter.com/CrK9DjyYMX
— NHKニュース (@nhk_news) July 28, 2026
கடந்த ஒரு வாரத்திற்குள் ஜப்பானில் பதிவாகும் இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். ஜூன் 25ஆம் தேதி வடக்கு ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இருப்பினும், நல்வாய்ப்பாக பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிங் ஆஃப் ஃபயர்
ஜப்பானை பொறுத்தவரை அது “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில் அமைந்துள்ளது. அதாவது இந்த இடத்தில் தான் நான்கு பெரிய டெக்டானிக் தட்டுகள் சந்திக்கிறது. சரியாக அங்கு ஜப்பான் இருப்பதே நிலநடுக்கத்திற்கு காரணம். உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் சுமார் 18 சதவீதம் ஜப்பானிலேயே பதிவாகின்றன. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்களை அந்த நாடு எதிர்கொள்கிறது.
பேரழிவுகள்
கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானில் சுமார் 9.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த பூகம்பம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி உலகையே அதிர்ச்சியடைய வைத்தது. அந்த பேரழிவில் சுமார் 18,500 பேர் உயிரிழந்தனர். மேலும், புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தும் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் இந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி வடக்கு ஜப்பானில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். டோக்கியோ உள்ளிட்ட பல நகரங்களில் உயரமான கட்டிடங்கள் குலுங்கியதால், பெரும் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும், அப்போது பெரியளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சூழலில் தான் இப்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் நிலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஜப்பான் மக்கள் அதிகாரிகள் அறிவுறுத்தல்களை கேட்டு நடக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


