Sports
oi-Yogeshwaran Moorthi
அட்லாண்டா: ஃபிஃபா உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அர்ஜென்டினா ஜாம்பவான் மெஸ்ஸியின் ஆட்டம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம் சுற்றி வளைக்கப்படுகிறோம், தம்மால் பாக்ஸிற்கு ட்ரிபிள் செய்து செல்ல முடியவில்லை என்பதை உணர்ந்த மெஸ்ஸி, உடனடியாக மாற்று திட்டத்தை உருவாக்கினார். அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
ஃபிஃபா உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியின் கார்டன் 55வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்ற நிலையில், அர்ஜென்டினா அணி ரசிகர்களுக்கு ஒரு நிமிடம் உயிரே போய்விட்டது. தொடர்ந்து 84வது நிமிடம் வரை அர்ஜென்டினா அணி எடுத்த முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை.

ஆனால் 85வது நிமிடத்தில் என்சோ ஃபெர்னாண்டஸ் அடித்த முதல் கோல் அர்ஜென்டினா அணிக்கு மிகப்பெரிய சம்பவமாக அமைந்தது. இங்கிலாந்து அணியின் “பார்க் தி பஸ்” ஸ்ட்ராட்டிஜியை சுக்குநூறாக உடைத்து எறிந்தார் என்சோ ஃபெர்னாண்டஸ். அதற்கு காரணமாக மெஸ்ஸி அமைந்தார். பார்க் தி பஸ் வியூகத்தால் அர்ஜென்டினா வீரர்களால் பாக்ஸ் உள்ளே செல்ல முடியவில்லை.
அப்படி உள்ளே சென்றாலும், இங்கிலாந்து வீரர்கள் எளிதாக சுற்றி வளைத்து பந்தை கைப்பற்றிவிடுகிறார்கள். இதனால் மெஸ்ஸி கொடுத்த கிராஸ் பாஸை, பாக்ஸிற்கு வெளியில் இருந்து என்சோ ஃபெர்னாண்டஸ் கோல் ஆக்கினார். தொடர்ந்து 2ஆம் பாதியின் கூடுதல் நேரத்தில் மெஸ்ஸி கொடுத்த பாஸை, லாட்டரோ மார்ட்டினஸ் ஹெட்டர் மூலம் கோலாக்கினார்.
இந்த 2 கோல்களுக்கும் மெஸ்ஸி அசிஸ்ட் செய்து அசத்தி இருக்கிறார். மெஸ்ஸி 65வது நிமிடம் வரை ட்ரிபிள் செய்து பாக்ஸ் உள்ளே செல்ல முயன்றார். ஆனால் இங்கிலாந்து இளம் வீரர்களிடம் மெஸ்ஸியால் ட்ரிபிள் செய்ய முடியவில்லை. இதனை உணர்ந்துவிட்ட மெஸ்ஸி, உடனடியாக எந்தவித சுயநலமும் இல்லாமல் கிராஸ் பாஸ் கொடுக்க தொடங்கினார்.
அங்குதான் இங்கிலாந்து அணி மெஸ்ஸியை கணிக்க தவறியது என்றே சொல்லலாம். ஜாம்பவான் வீரர்களை சுற்றி வளைத்துவிட்டால் மட்டும் அவர்களை அடக்கிவிட முடியாது என்பதை மெஸ்ஸி மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளார். கடைசி 15 நிமிடங்களில் மட்டும் மெஸ்ஸி இப்படியான ஏராளமான கிராஸ் பாஸை கொடுத்தார். அதில் சிலவற்றை அர்ஜென்டினா வீரர்கள் கோலாக்க தவறவிட்டனர்.
இதனால் இதுதான் மெஸ்ஸி என்று சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலமால இந்த உலகக்கோப்பை தொடரின் கோல்டன் பூட் ரேஸிலும் மெஸ்ஸி 8 கோல், 4 அசிஸ்ட் மூலமாக முதலிடத்தில் இருக்கிறார். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வீரர்கள் ஏதாவது அசாத்தியத்தை நிகழ்த்தினால் மட்டுமே மெஸ்ஸியை கோல்டன் பூட் விருதை வெல்வதில் இருந்து தடுக்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.