ஜூன் 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை: என்ன உரை நிகழ்த்த போகிறார் ஆளுநர் ? – Kumudam

Spread the love

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வரும் ஜூன் 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கூட்டத்தொடரின் முதல் நாளில் மரபுப்படி தமிழக ஆளுநர் உரையாற்ற உள்ளார். ஆளுநர் தனது உரையில் அரசின் புதிய திட்டங்கள், கொள்கை முடிவுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிடுவார். ஆளுநர் உரை முடிந்ததும் அன்றைய தினத்திற்கான பேரவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும்.

பேரவை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் உரை நிகழ்த்திய பிறகு, சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று விளக்கினார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

பொதுவாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மூன்று முதல் நான்கு நாட்கள் விவாதம் நடைபெறுவது வழக்கமாகும். அதன் பின்னரே துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கும் என்பதால், இந்த புதிய கூட்டத்தொடர் குறைந்தது இரண்டு வாரங்களாவது நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *