உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாத் யாத்திரை கடந்த 16 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி உலகெங்கும் உள்ள கிருஷ்ண பக்தர்கள் ஆங்காங்கே பூரி ஜகந்நாத் ரத யாத்திரையை நடத்தி வருகிறார். சென்னையில் நேற்று ஈ.சி.ஆரில் நடைபெற்ற பிரமாண்ட ஸ்ரீ ஜகந்நாத ரத யாத்திரை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பஜனை செய்து மகிழ்ந்தனர்.

சென்னை இஸ்கான் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த யாத்திரை நேற்று பிற்பகல் 2:30 மணிக்குத் தொடங்கியது. ஸ்ரீ ஜகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் எழுந்தருளிய அலங்கரிக்கப்பட்ட ரதம், சின்ன நீலாங்கரையில் தங்கமயில் ஜுவல்லரி அருகில் இருந்து புறப்பட்டு இஸ்கான் கோயில் ஈ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தை சென்றடைந்தது.
செல்லும் வழி எங்கும் இருக்கும் குடியிருப்பு வாசிகள் இந்த யாத்திரையில் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும் ஹரிநாம சங்கீர்த்தனம், கீர்த்தனம் மற்றும் நடனத்துடன் ரத ஊர்வலம் நடைபெற்றது. புனித நாமங்களைப் பாடி, ரதத்தை இழுக்கும் புனித சேவையில் நேரடியாகப் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் இருந்த பகவானின் திருவுருவங்களை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

‘ரதத்தை இழுப்பது வெறும் தேரை நகர்த்துவது அல்ல. பகவானை அன்புடன் நமது இதயத்திற்குள் அழைப்பது’ என்பதுதான் இதன் தாத்பர்யம். ‘பக்தர்களில் எந்த வேறுபாடும் இல்லை. அனைவரும் பகவான் கிருஷ்ணன் முன்பாக சமம்’ என்பதை உணர்த்தும்விதமாக இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
மேலும் இதில் கலந்துகொண்ட பக்தர்களிடம் பேசியபோது, ‘எல்லோராலும் பூரி ஜகந்நாதர் யாத்திரையில் கலந்துகொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களின் வருத்தம் போக்கும்விதமாக சென்னையில் இந்த ரதயாத்திரை நடைபெறுகிறது. எனவே தவறாமல் இதில் கலந்துகொள்கிறோம்’ என்றனர்.
இந்த விழாவில் பூஜ்யஸ்ரீ ஜயபதாகா ஸ்வாமி மகாராஜ் மற்றும் பூஜ்யஸ்ரீ பானு ஸ்வாமி மகாராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஆசி வழங்கினர். கலந்துகொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.