“தி.மு.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சியும், தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டங்களுமே தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்கும். எங்கள் தொகுதியில் தி.மு.க-வுக்கு உள்ள ஆதரவைப் பார்த்தாலே அது தெரியும்” என்கிறார் ஜோலார்பேட்டை தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கவிதா தண்டபாணி. பிரசாரக் களத்தில் உற்சாகமாக வளம்வருபவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…
ஜோலார்பேட்டை தொகுதிக்கு நீங்கள் முன்வைக்கும் திட்டங்கள் என்னென்ன?
“மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்துக் கொடுப்போம். மாம்பழக் கூழ் தொழிற்சாலையும், அகர்பத்தி கொள்முதல் நிலையத்தையும் நிர்மானிப்போம். விவசாயத்தை வளப்படுத்த தென்பெண்ணை ஆற்றிலிருந்து செட்டேரி அணைக்குத் தண்ணீர் வழிதடம் ஏற்படுத்தி, விவசாய பாசனத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்படும். ஏரி குளங்கள் முழுமையாகத் தூர்வாரப்படும். ஜோலார்பேட்டை ஏரியை தூய்மைப்படுத்தி, பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது. ஏலகிரி மலையை தரம் உயர்த்தி கூடுதல் அரசு பூங்காகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் அமைத்துத் தரப்படும்.”
ஜோலார்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக எதைப் பார்க்கிறீர்கள்?
“இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக இந்த தொகுதியில் சிப்காட் அமைத்து தரவேண்டும் என்கிற கோரிக்கை நீண்டநாளாக உள்ளது. செட்டேரி அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் நினைக்கிறார்கள்.

பீடி சுற்றும் தொழிலார்களுக்கு அரசு சலுகைகள் மானியங்கள் வழங்கவேண்டும். ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும். தொகுதியில் 24/7 கால்நடை மருத்துவமனை அமைகப்பட வேண்டும்… இந்தக் கோரிக்கைகள் எல்லாம் மக்களிடமிருந்து எங்களுக்கு வந்துள்ளது.”