இப்படத்தின் படப்பிடிப்புத் தொடக்கம் முதலே, ‘படம் கைவிடப்பட்டது’, ‘படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது’ எனப் பல வதந்திகள் பரவிக்கொண்டே இருந்தன.
இது குறித்துப் பேசிய யஷ், “இப்போதெல்லாம் ஒரு பெரிய படம் தொடங்கினாலே, 10-வது நாளிலோ அல்லது 20-வது நாளிலோ ‘படம் கைவிடப்பட்டது’ என்று செய்தி வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. இவர்கள் இதையெல்லாம் எங்கிருந்து எழுதுகிறார்கள் என்றே தெரியவில்லை.
முதலாவதாக, ஒரு திரைப்படத்தை உருவாக்கி வெளியிடுவது என்பது இந்த உலகத்திற்கு எதிராகப் போர் தொடுப்பது போல் ஆகிவிட்டது. ஒரு படத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
படப்பிடிப்பு, நடிகர்களின் தேதி என ஆயிரம் சிக்கல்கள் இருக்கும். எத்தனை வதந்திகள் வந்தபோதிலும் என் தயாரிப்பாளர் உறுதியாக எங்களுடன் நின்றார். நாங்கள் இதுவரை 200 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.
அனைத்து நடிகர்களும் தங்களின் முழு உழைப்பையும், நேரத்தையும் இப்படத்திற்காகக் கொடுத்துள்ளனர். நாங்கள் செலவழித்த ஒவ்வொரு ரூபாயும் திரையில் பிரம்மாண்டமாகத் தெரியும்” என்றார்.