ஏன் எதிர்க்கட்சித் தலைவர்கள் கை தட்டலா? வன்னி அரசு பேச்சால் சலசலப்பு..! – Kumudam

Spread the love

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக தொடர்ந்து எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை கட்டாயமாக்கும் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் இன்று (ஆகஸ்ட்10) சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்தில் இடம்பெறாமல், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்துக்குப் பிறகு பாடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. முதலமைச்சர் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற நிகழ்ச்சிகளிலும் இதே வரிசை பின்பற்றப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது, தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் செயல்படும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பாடல் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றபோது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கை குறித்தும் விவாதம் எழுந்தது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முக்கிய தீர்மானத்தை முன்வைத்தார். அதன்படி, தமிழகத்தில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற வேண்டும் என்ற நடைமுறைக்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது விசிகவைச் சேர்ந்த வன்னி அரசு பேசிய கருத்து அவையில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தபோது ஆளும் தரப்பினர் மட்டும் கைதட்டி வரவேற்றதாகவும், எதிர்க்கட்சி வரிசையில் அதுபோன்ற வரவேற்பு காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து உறுப்பினர்களும் இந்த முடிவை வரவேற்க வேண்டும் என அவர் கூறியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் தனது கருத்தை விளக்கிய வன்னி அரசு, யாரையும் குறை கூறும் நோக்கத்தில் தான் பேசவில்லை என்றும், ஆளும் தரப்பை விட எதிர்க்கட்சி வரிசையில் மேசை ஒலி குறைவாக இருந்ததை மட்டுமே சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார். அனைவரும் இந்த தீர்மானத்தை வரவேற்றால் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

மேலும், தமிழ்நாடு மற்றும் தமிழர் அடையாளத்தை முன்னிறுத்திய பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் அரசியல் பங்களிப்புகளை குறிப்பிட்ட வன்னி அரசு, தற்போதைய சூழலில் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான நீண்டகால சர்ச்சைக்கு புதிய நடைமுறை மூலம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தத் தீர்மானம் அமைந்துள்ளதாக ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *