Business
oi-Vigneshkumar
மும்பை: இந்தியாவின் மிக பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான “டாடா சன்ஸ்” பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நிதி திரட்ட ஒன்னும் டாடா சன்ஸ் பட்டியலிடப்படவில்லை. மாறாக ரிசர்வ் வங்கியின் கடுமையான ஒழுங்குமுறை விதிகளே இதற்கு முக்கிய காரணமாக உள்ளன. இது குறித்து நாம் விரிவா பார்க்கலாம்.
நமது ஊரில் கிட்சனில் பயன்படுத்தப்படும் உப்பு முதல் வானையே ஆக்கிரமிக்கும் விமானம் வரை கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இருக்கும் ஒரே நிறுவனமாக டாடா இருக்கிறது. இந்த அத்தனை நிறுவனங்களுக்கும் தாய் நிறுவனமாக இருப்பது டாடா சன்ஸ் தான்.

டாடா சன்ஸ்
இத்தனை ஆண்டுகளாக டாடா சன்ஸ் பட்டியலிடப்படாத ஒரு நிறுவனமாகவே செயல்பட்டு வந்தது. ஆனால், இப்போது டாடா சன்ஸ் நிறுவனம் பட்டியலிடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக நிதி திரட்டவே எந்தவொரு நிறுவனமும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும். ஆனால் டாடா சன்ஸ் கதையே வேறு! ரிசர்வ் வங்கியின் விதிகள் காரணமாக வேறு வழியில்லாமலேயே டாடா சன்ஸ் பட்டியலிடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனமாக செயல்பட்டு வரும் டாடா குழுமத்தின் கட்டமைப்பில் மிக பெரிய மாற்றம் ஏற்படும். இதனால் இந்திய பங்குச்சந்தையிலும் இந்த ஐபிஓ மிக முக்கிமயானதாக மாறியுள்ளது. நாடு முழுக்க உள்ள முதலீட்டாளர்கள் இதை ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
என்ன காரணம்
கடந்த 2022 செப்டம்பர் மாதம், டாடா சன்ஸை ரிசர்வ் வங்கி வங்கி அல்லாத நிதி நிறுவனம், அதாவது Upper Layer Non-Banking Financial Company என்ற பிரிவில் சேர்த்தது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி இப்படி அப்பர் லேயர் பிரிவில் வகைப்படுத்தப்படும் நிறுவனங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தங்களது பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும். அதாவது இதனால் டாடா சன்ஸ் விரும்பி தாங்களாக ஐபிஓ-க்கு வரவில்லை. மாறாக ரிசர்வ் வங்கி விதிகளால் கட்டாயம் பட்டியலிடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ரிசவ் வங்கியின் அப்பர் லேயர் பிரிவில் வர நிறுவனத்தின் சொத்தும் முக்கிய காரணமாக உள்ளது. இந்த பிரிவில் வருவதற்கான ரூ.1 லட்சம் கோடி சொத்து மதிப்பு இருக்க வேண்டும். டாடா சன்ஸின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.1.75 லட்சம் கோடியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கூடுதல் ஒழுங்குமுறை கண்காணிப்பில் கொண்டு வரவே இந்த நடவடிக்கை
உடன்பாடு இல்லை
இருப்பினும், டாடா சன்ஸுக்கு இதில் துளியும் உடன்பாடு இல்லை. ஏகப்பட்ட டாடா நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்தாலும், தாய் நிறுவனமான டாடா சன்ஸை பட்டியலிட அவர்கள் தயாராக இல்லை. தனியார் நிறுவனமாகவே வைத்திருக்க விரும்பினர்.. இதற்காக தனது கடனை பெரிய அளவில் குறைத்தது. சுமார் ரூ.21,000 கோடிக்கும் அதிகமான கடனை முன்கூட்டியே செலுத்தி, டாடா சன்ஸ் கடனில்லாத நிறுவனமாக மாறியது. மேலும், 2024 மார்ச் மாதம் தனது முதலீட்டு நிறுவனத்தையும் சரண்டர் செய்ய அனுமதி கோரி விண்ணப்பித்தது.
இதன் மூலம் வங்கி அல்லாத நிதி நிறுவனம் என்பதில் இருந்து மாறி, ஒரு ஹோல்டிங் நிறுவனமாக மாறிவிடலாம் என்பது டாடாவின் திட்டம். இதன் மூலம் கட்டாய IP-வை தவிர்க்க முடியும் என நினைத்தார்கள். ஆனால், டாடாவின் கோரிக்கையை ரிசர்வ் வங்கி இன்றைய தினம் நிராகரித்தது. இதனால் டாடா சன்ஸ் வேறு வழியில்லாமல் பட்டியலிடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பங்குதாரர்கள்
இது டாடா குடும்பத்திற்கு அதிருப்தி என்றாலும் இதர முதலீட்டாளர்கள் ஹேப்பி தான் என தெரிகிறது. அதாவது இப்போது டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா குழுமத்தை வழிநடத்தும் டாடா டிரஸ்டிற்கு 66% பங்குகள் உள்ளன. அதே நேரத்தில், எஸ்பி க்ரூப் நிறுவனத்திற்கு சுமார் 18.3% பங்குகள் உள்ளன. எஸ்பி குழுமம் இப்போது கடுமையான கடன் சுமையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, டாடா சன்ஸ் IPOவுக்கு வந்தால் தனது பங்கில் ஒரு பகுதியை விற்று கடனை குறைக்கலாம் என்பதால் SP குழுமம் ஐபிஓ-க்கு ஆதரவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஏன் முக்கியம்?
டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தின் உச்ச நிறுவனமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு டாடா சன்ஸ் தான் தாய் நிறுவனம். டாடா சன்ஸ் பட்டியலிடப்பட்டால்.. நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் நிதி நிலை தொடர்பான வெளிப்படைத்தன்மை மேலும் அதிகரிக்கும். மேலும், இதுவரை தனியார் கட்டமைப்பில் இருந்த டாடா குழுமத்தின் உச்ச நிறுவனத்தில் பொதுமக்களும் பங்குதாரர்களாகும் வாய்ப்பு உருவாகும்.

