அமெரிக்கா முதல் உலக நாடுகள் வரை அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைக்கிறார் போலும்.
வரி.. போர் என அவ்வப்போது உலக நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தும் ட்ரம்ப், உள்நாட்டிலும் அவ்வப்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
வருகிற ஜூன் மாதம் முதல், அமெரிக்காவில் அச்சடிக்கப்படும் புதிய டாலர்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் கையெழுத்து இடம் பெறப்போகிறது.
வழக்கமாக, கருவூலச் செயலாளர் மற்றும் கருவூல அதிகாரியின் கையெழுத்து மட்டுமே இடம்பெறும். ஆனால், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு அதிபரின் கையெழுத்து டாலரில் இடம்பெற உள்ளது.

அமெரிக்காவின் கருவூலத் துறை இன்னொரு பரிந்துரையும் முன்வைத்துள்ளது. அமெரிக்கா இந்த ஆண்டு தனது 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது.
இதையொட்டி ட்ரம்ப் உருவம் பொறித்த $1 நாணயத்தை வெளியிடுவது தான் அந்தப் பரிந்துரை.
2024-ம் ஆண்டு ட்ரம்பிற்கு நடந்த கொலை முயற்சியை நினைவுக்கூரும் விதமாக, ஒரு பக்கம் ட்ரம்பின் முகமும், இன்னொரு பக்கம், “FIGHT FIGHT FIGHT’ என்கிற வாக்கியமும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.