இரண்டாம் உலகப் போர், உலகையே உலுக்கிக் கொண்டிருந்த காலம். அப்போது FIFA-வின் துணைத் தலைவராக இருந்த இத்தாலியைச் சேர்ந்த ஒட்டோரினோ பராசி, ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்தார்.
ரோம் நகரில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை, ஆக்கிரமிப்புப் படைகளின் கைகளில், குறிப்பாக ஹிட்லரின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ரகசியமாக வெளியே எடுத்தார். பின்னர், அதை ஒரு சாதாரண ஷூ பாக்ஸில் வைத்து, தனது கட்டிலுக்கு அடியில் போர் முடியும் வரை மறைத்து வைத்தார்.
ஒரு ஷூ பாக்ஸிற்குள் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பரிசுகளில் ஒன்று பதுக்கப்பட்டிருந்தது, வரலாற்றின் ஒரு ஆச்சரியமான அத்தியாயம்.

அந்தக் கோப்பைக்கு சோதனை திருட்டு வடிவத்திலும் வந்தது. 1966-ல், இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, லண்டனில் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பை திருடப்பட்டது.
ஒட்டுமொத்த இங்கிலாந்துமே அதிர்ச்சியில் உறைந்தது. ஆனால், ‘பிக்கிள்ஸ்’ என்ற ஒரு நாய் ஹீரோவாக மாறியது. தனது உரிமையாளருடன் நடைபயிற்சி சென்றபோது, ஒரு செய்தித்தாளில் சுற்றப்பட்டிருந்த பொட்டலத்தை பிக்கிள்ஸ் முகர்ந்து கண்டுபிடித்தது. உள்ளே, தொலைந்துபோன உலகக் கோப்பை!
அந்த ஆண்டு இங்கிலாந்து கோப்பையை வென்றபோது, வெற்றிவிழா விருந்துக்கு பிக்கிள்ஸுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், சோகம் அத்துடன் முடியவில்லை. பிரேசிலுக்கு நிரந்தரமாக வழங்கப்பட்ட அதே ஜூல்ஸ் ரிமெட் கோப்பை, 1983-ல் ரியோ டி ஜெனிரோவில் உள்ள பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைமையகத்தில் இருந்து மீண்டும் திருடப்பட்டது. இந்த முறை, அது முழுமையாக மீட்கப்படவே இல்லை.