டிஜிட்டல் இந்தியானு சொன்னால் மட்டும் பத்தாது.. UPIக்கு கூட கட்டணம்! மக்களுக்கு தான் பெரிய தலைவலி! | UPI Charges Above ₹2,000 Raise Questions Over Digital India and Cashless Payments

Spread the love

Business

oi-Vigneshkumar

சென்னை: பணம் எடுத்து செல்ல வேண்டாம், சில்லறை குறித்து கவலைப்பட வேண்டாம், கடைக்கு சென்றால் போதும்.. மொபைலில் யுபிஐ மூலம் பணத்தை செலுத்திவிடலாம். கடந்த சில ஆண்டுகளில் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் யுபிஐ ஏற்படுத்திய மாற்றம் இதுதான். ஆனால், தற்போது ரூ.2,000க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் இந்தியா குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த காலகட்டத்தில் யுபிஐ என்பது நமது வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. வெளியே செல்லும்போது பர்ஸ் அல்லது பணத்தை எடுத்து செல்ல வேண்டும் என்ற நிலையையே யுபிஐ மொத்தமாக மாற்றிவிட்டது. சில்லறை தொடங்கி லட்ச கணக்கு வரை எளிதாக நொடிகளில் யுபிஐ செய்ய முடியும் என்பதே இதன் பிளஸ் பாயிண்டு!

UPI Charges UPI Gpay

கட்டணம்

கடந்த அக்டோபர் 15 முதல் ரூ.2,000க்கு மேல் வணிகர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே இந்தக் கட்டணம் இருக்கும். ரூ.2,000க்குள் செய்யப்படும் பரிவர்த்தனைகள் மற்றும் தனிநபர்களுக்கு இடையிலான யுபிஐ பரிமாற்றங்கள் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும். சிறு வணிகர்களுக்கும் சில விதிவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய விதிமுறையின்படி இந்த MDR வாடிக்கையாளர்களிடம் நேரடியாக வசூலிக்க கூடாது. கட்டணத்தை வணிகர்கள்தான் ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்குதான் அடுத்த கேள்வி எழுகிறது. வணிகர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவை எதாவது ஒரு காரணம் சொல்லி.. எதிர்காலத்தில் சேவை கட்டணம் என சொல்லி மக்கள் தலையிலேயே கட்டிவிடுவார்களா என்பதுதான் அது.

யாருக்கு சிக்கல்?

பெரிய நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் இந்த செலவை தாங்களே ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் குறைந்த லாபத்தில் இயங்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் ஏற்படும் கூடுதல் செலவு வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏற்கனவே யுபிஐ மூலம் பணம் செலுத்துவது மிகவும் எளிதாகிவிட்ட நிலையில், இந்த கட்டணம் என்பது மக்களை மீண்டும் ரொக்க பரிவர்த்தனைகளை நோக்கி தள்ளுமா என்ற விவாதத்தையும் எழுப்பியுள்ளது. சிறு வணிகர்கள் சார்ந்த அமைப்புகளும் இது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜிஎஸ்டி

இதனுடன் MDR மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த ஜிஎஸ்டி என்பது முழு யுபிஐ பரிவர்த்தனைத் தொகைக்கும் கிடையாது. MDR கட்டணத்தின் மீதே 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதுவும் ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட தகுதியுள்ள வணிகர்கள், அந்த ஜிஎஸ்டி தொகையை இன்புட் டாக்ஸ் கிரெடிட் மூலம் சரிசெய்துகொள்ள முடியும்.

உதாரணமாக ரூ.10,000 யுபிஐ பரிவர்த்தனைக்கு 0.4 சதவீத என்றால் ரூ.40 கட்டணம் வரும். அதன் மீது மட்டுமே ஜிஎஸ்டி கணக்கிடப்படும். அதேநேரம் இந்த செலவை வாடிக்கையாளரிடம் நேரடியாக மாற்ற கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொத்தமாக மாறிடுச்சு

யுபிஐ வந்த பிறகு ஏடிஎம் மையங்களுக்கு செல்வது, கையில் பணம் வைத்திருப்பது, சில்லறை தேடுவது போன்றவை பலரது வாழ்க்கையில் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.. ஒரு காலத்தில் பர்ஸ் இல்லாமல் வெளியே செல்வதே சிரமமாக இருந்த நிலையில், இன்று மொபைல் போன் மட்டும் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், பல ஆண்டுகளாக இலவசமாகப் பயன்படுத்தி வந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பில் கட்டணம் அறிமுகப்படுத்தப்படுவது இயல்பாகவே கேள்விகளை எழுப்புகிறது.

விவாதம்

யுபிஐயை பராமரிக்க உள்கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு, வங்கி மற்றும் தொழில்நுட்பச் செலவுகள் இருப்பது உண்மை. ஆனால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து அதன் மூலம் மக்களை பணமில்லா பரிவர்த்தனைக்கு பழக்கப்படுத்திய பிறகு, அதே வசதிக்கு கட்டணம் விதிப்பது சரியான நடவடிக்கையா என்பதுதான் தற்போது விவாதிக்க வேண்டிய கேள்வியாக உள்ளது.

குறிப்பாக, கட்டணம் நேரடியாக வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படாது என்றாலும் அதன் மறைமுக தாக்கத்தை அரசு கண்காணிக்க வேண்டியது முக்கியமாகிறது. டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது யுபிஐ எவ்வளவு வசதியானது என்பதோடு, அது மக்களுக்கும் வணிகர்களுக்கும் எவ்வளவு செலவு குறைந்ததாக தொடர்கிறது என்பதும் முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *